2 நெருங்கினா(ள்)ல்?


குலதெய்வம் காட்டு முனிக்கு நேர்ந்து விட்டது போல சடையாய் சிகை. சிக்கெடுக்கவே சில வருடங்கள் ஆகலாம். சரி முடி தான் அந்த லட்சணத்தில் இருக்கிறது என்று பார்த்தால் முகத்தில் தாடி மீசையை தவிர வேறொன்றும் அடையாளம் தெரியவில்லை.  திடீரென்று டைனோசர் ஒன்றுக்கு தாடி மீசை முளைத்து சடை சடையாய் தொங்கிய சிகையோடு குண்டலகேசியை நெருங்கி அவளது இதழில் முத்தமிட முயன்றது. முயலவில்லை முத்தமிட்டே விட்டது.

"ஆஆ" என்று அலறலோடு விழுந்தடித்து எழுந்தாள் குண்டலகேசி. அவளின் பக்கத்தில் படுத்திருந்த மணிமேகலை குண்டலகேசியின் கடைசி அக்கா"என்னடி.. பூரான் எதாச்சும் கடிச்சிருச்சா.. அங்க சுண்ணாம்பு வச்சிருக்கேன் எடுத்து தடவிட்டு மூடிக்கிட்டு தூங்கு.." என்றதோடு பேச்சு மூச்சை காணவில்லை.

முத்து முத்தாக வியர்த்து ஊற்றியது குண்டலகேசி... "சே கனவா..இவ்ளோ கொடூரமாவா கனவு வரும்.. எல்லாம் அந்த ஜடாமுனியால வந்தது" அவளின் சிந்தனை இரண்டு நாட்களுக்கு முன்பு சிறையில் சென்று இறுதியாக பேட்டி எடுத்தவனிடம் வந்து நின்றது. பிறரிடம் சொல்ல ஏதாவது வார்த்தைகள் இருக்கிறதா என்று இவள் குத்துமதிப்பாக கேட்க அவனோ நான் உன்னை காதலிக்கிறேன் என்ற வார்த்தைகளை இவளைப் பார்த்து கூறிவிட்டான்.

அதை மட்டுமா கூறினான் அவள் பாட்டி ஆனாலும் விடமாட்டேன் என்றல்லவா கூறிவிட்டான் படுபாவி.. அவன் அம்மாதிரி கூறியதும் எழுந்து நடந்து வருவதற்கு கூட அவள் உடலில் திராணி இல்லை. கேமராமேன் கிஷோர் தான் அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தது. தன் காதில் விழுந்தது உண்மை தானா.. தூக்கு தண்டனை கைதியான இவன் என்னை விரும்புகிறானா?  செத்ததுக்கு அப்புறம் டூயட் பாட துணை தேடுகிறானோ?

இதே நினைப்பில் அவள் சில அடிகள் எடுத்து வைக்க இருபக்கம் சிறைக் கம்பிகளுக்கு உள்ளே இருந்த கைதிகள் இவளைப் பார்த்து வேண்டுமென்றே ஹேய் ஓய் என்று கத்த "ஹேய்"என்று ஒரே ஒரு உறுமல் சத்தம் கேட்டது.அந்த சிறையே மயான அமைதியாகி விட்டது.அந்த உறுமல் சத்தத்தைக் கேட்டு சுய உணர்வு பெற்றாள் குண்டலகேசி. அவனைத் திரும்பிப் பார்த்தாள்..அவ்வளவு அருகில் இருந்து பார்த்தே முகம் தெரியவில்லை சற்று தூரத்தில் இருந்து பார்ப்பதால் சத்தியமாகவே தெரியவில்லை.


ஆனால் அவனுக்கு அவள் முகம் நன்றாக தெரிந்தது. பச்சை நிற விழிகளுக்குள் அவள் பச்சைக் கிளியாக பதிந்து விட்டாள்..மிரண்ட குழந்தையாக அவள் திருதிருவென்று பார்க்க அந்த அழகில் அவன் சொக்கித்தான் போனான். தூக்குத் தண்டனைக் கைதியான அவனுக்கு இனி இந்த அழகு தேவதையை பார்க்க முடியுமா என்பதே சந்தேகம்தான். அப்படிப் பார்க்க முடிந்தால்? அவள் சென்ற பிறகு தான் அமர்ந்திருந்த அதே மேடைக்கு திரும்ப வந்தான். காலில் ஏதோ சுருக்கென்று குத்தியது. இருளுக்குப் பழக்கப்பட்ட அவன் கண்கள் கீழே குனிந்து குத்தியத்தைக் கையில் எடுத்து மற்றொரு கையின் உள்ளங்கையில் வைத்து பார்த்தான்.

அவள் அணிந்திருந்த மணி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட குர்த்தியில் இருந்து உதிர்ந்த ஒரு மணி.. உள்ளங்கையை இறுக்கமாக மூடிக் கொண்டான்.

குண்டலகேசியையும் கிஷோரையும் பார்த்த டைரக்டர் என்ன நடந்தது என்று வினவ கிஷோர் தான் பதிவு செய்ததை ஒளிபரப்பிக் காட்ட டைரக்டர் மிகவும் சந்தோஷப்பட்டார். "இத மட்டும் லாஸ்ட்டா நாம இந்த சீசன் முடியும் போது போட்டா  எப்படி இருக்கும்.. தூக்கு தண்டணை கைதியின் கடைசி காதல்.. எப்படி டைட்டில்"...  அவர் அவ்விதம் கூறியதும் குண்டலகேசி பதறிவிட்டாள்.

" அது என்னோட வாழ்க்க சார்..அவன் செத்து போய்ட்டா பிரச்சனை இல்ல. சொன்ன மாதிரி அவன் வெளியே வந்தா என் நிலைம என்ன ஆகும்..உங்கள என் இடத்துல வச்சு யோசிச்சு பாருங்க சார்.. இது டிவியில் போட்டு என் மூஞ்ச ஊருக்கே வைரலாக்க போறீங்களா"கோபமாக கேட்டாள் குண்டலகேசி.

டைரக்டர் சூப்பரின்டை பார்த்து"சார் அவன் உண்மயாவே செத்துருவானா"

" இன்னும் ஒரு வாரத்துல அவனுக்கு தூக்கு சார்.."

"ஒரு வாரத்துல தூக்குன்னு சொல்றீங்க..ஆனா அவன் எப்படி எனக்கு ப்ரொபோஸ் பண்றான்.."விடாமல் கேட்டாள் குண்டலகேசி..


"நான் தான் சொன்னேன்ல அவன் ஒருமாதிரி.. பயங்கரமான ஆளு அவன். அரசியல் சப்போர்ட் வேற.. எத்தனயோ தடவ சொன்ன அவன இன்டர்வியூ எடுக்க வேண்டாம்னு நீங்க கேக்கல.."


" சார் நான் என்ன ஆசைப்பட்டா அவன இன்டர்வியூ எடுத்தேன்..அவன் அந்த கொரில்லா செல்லுல இருக்கானு நீங்க சொன்னதுல இருந்து என் உடம்புல இருக்கிற சுகர் எல்லாம் குறஞ்சிட்டு வருது.. இப்ப மயக்கமே வருது"...


"எம்மா மயங்குறதா இருந்தா வெளிய போய் மயங்கி விழு..இங்க விழுந்து வச்சிராத.."சூப்பரின்ட் சூடம் அடிக்காத குறையாக சத்தியம் செய்து அவன் கண்டிப்பாக இறந்து விடுவான் என்பதை உறுதி செய்த பின்புதான் குண்டலகேசி அந்த இடத்தை விட்டு வெளியே வந்தாள்.. அன்று வீட்டிற்கு வந்தவளுக்கு கடுமையான காய்ச்சல்.. டாக்டர் கண்டிப்பாக ஒரு வாரம்  ஓய்வில் இருக்கவேண்டுமென கூறிவிட்டார்.டைரக்டரும் அவளின் நிலை புரிந்து அவளை நன்றாக ஓய்வு எடுத்து வரச் சொன்னார்.


மருந்து சாப்பிட்டு குளிர் காய்ச்சலில் போர்த்தி படுத்தாலும் கெட்ட கனவின் மூலம் அவன் வந்து விட்டான்..இன்னும் பயம் அதிகரித்தது அவளுக்கு.. யாரையாவது விழித்திருந்து தன் பக்கத்தில்  அமர்ந்திருக்க செய்தால் நன்றாக இருக்கும்.. அப்படி யார் கண் விழித்து அவளை உறங்க செய்வது. அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் மணிமேகலையை பார்த்தாள்..  தொழில் செய்ய வேண்டும் உன் அப்பன் வீட்டிற்குச் சென்று ஏதாவது இருந்தால் சுரண்டிக் கொண்டு வா என்று கணவன் கடவாய்ப் பல்லை உடைத்து அனுப்பியிருந்தான்..  இப்படிப்பட்ட கணவன் உனக்கு தேவையா கம்மென்று நம் வீட்டில் இரு..


என்று தங்கை கூறியதற்கு கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் அவன் கேட்ட தொகையை வாங்காமல் இங்கிருந்து செல்லப் போவதில்லை என்று வீராப்பாக பிறந்த இடத்தில் டேரா போட்டு விட்டாள் மணிமேகலை. அவளைக் சொல்லியும் ஒன்றுமில்லை,உண்மையை சொல்லப்போனால் அப்பாவிடம் ஐந்து நயா பைசா கூட இருக்காது.கணவனிடம் அப்பா பணத்திற்கு ஏற்பாடு செய்கிறார் ஒரு இரண்டு வாரம் நான் இங்கே இருந்து கையோடு பணத்தை வாங்கி வருகிறேன் என்று சொல்லி விட்டு பிறந்தகத்தில் அக்கடா என்று ஓய்வில் இருக்கிறாள்.


எப்படியும் அவன் கேட்ட தொகையைக் கொடுக்க முடியாது. அவன் கேட்ட தொகையில் ஒரு சதவீத பணத்தை அங்கேயும் இங்கேயும் பணத்தை தேற்றி அவளை பேருந்தில் ஏற்றி புகுந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.இவள் சென்றவுடன் சிந்தாமணி வருவாள்.அவளுக்கு என்ன மொய் எழுத காத்திருக்கிறதோ.


ஆவுடையப்பனுக்கு மொத்தம் ஏழு பெண்கள். ஜாதகத்தில் அபாரமான நம்பிக்கை இருந்த ஆவுடையப்பனிடம் விளங்காத ஜோதிடன் ஒருவன் "உன் ராசிப்படி உனக்கு ஆம்பள புள்ள பொறந்ததா நீ எங்கயோ போயிருவ..வேல வெட்டியே செய்யாம கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கலாம்.. கால் அமுக்க நாலு பேரு கைய அமுக்க நாலு பேரு அது மட்டும் இல்ல முக்கிய குறிப்பு எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டினு உன்ன சுத்தி ஒரே பொம்பளைங்களா இருப்பாங்க.. ஒரே ஜாலிதான் போ.. இதெல்லாம் ஒரு ஆம்பள பையன் பிறந்தா தான் நடக்கும்.."என சும்மா இருந்த ஆவுடையை நன்றாக ஏற்றி விட்டு விட்டான்..


முக்கிய குறிப்பை விடுத்து ஜோதிடன் சொன்ன அத்தனை விஷயங்களையும் மனைவியிடம் பகிர்ந்துகொண்டார் ஆவுடையப்பன்.. பஞ்சத்தில் அடிபட்ட அவரும் எத்தனை காலத்திற்கு தான் நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது என உடல் அழகை வெளியே எடுத்து காட்டிய பழைய கிழிந்த புடவையைப் பார்த்து படுவேகமாக குழந்தைகள் பெற்று போடும் இயந்திரமாக தன்னை மாற்றிக்கொண்டார். கண்ணகி, மாதவி, கோப்பெருந்தேவி, வளையாபதி,  சிந்தாமணி, மணிமேகலை, கடைக் குட்டியாக குண்டலகேசி.


தமிழ் வாத்தியாரான ஆவுடையப்பன்  ஐம்பெரும் காப்பியங்களில் இருக்கும் பெயர்களை மன வேதனையோடு தன் பெண்களுக்கு வைத்துவிட்டார். மற்றவர்களின் பெயர் கூட ஏதோ பரவாயில்லை ஆனால் இதில் பாவப்பட்ட ஜென்மங்கள் யார் என்றால்  வளையாபதியும் குண்டலகேசியும் தான்.. ஆணுக்கு வைக்கவேண்டிய பெயரை வளையாபதிக்கு வைத்துவிட்டதால் பாவம் அவள் பட்ட பாட்டை என்னவென்று சொல்ல.. குண்டலகேசி இந்தப் பெயரை வைத்துக்கொண்டு இவள் பட்ட பாட்டை யார் சொல்ல?


குண்டலகேசி பிறந்த உடனே மருத்துவர் கூறிவிட்டார் ஆண் குழந்தை அல்ல இனி எந்த குழந்தையும் பெற்றுக் கொள்ள உங்கள் மனைவியின் உடலில் தெம்பு இல்லை என்று. மன வேதனையோடு வீடு வந்து சேர்ந்தார் ஆவுடையப்பன். வீடு வரும் வழியில் அவர் கேள்விப்பட்டது  அவருக்கு ஆருடம் சொன்ன ஜோதிடன் ஒரு பொய்யன் என்பது. பொய்யன் ஒருவன் கூறியதை கேட்டு இந்த கஷ்ட காலத்தில்  அடுக்காக ஏழு பெண்களை பெற்றுவிட்டோம் என்று வீட்டுக்கு வந்ததும் முதல் காரியமாக தூணில் சென்று நேராக முட்டிக்கொண்டார்.


குண்டலகேசி பிறந்த சில வருடங்களிலேயே அவளது அம்மா இறந்துவிட்டார்.அதன் பிறகு ஏழு பெண்களை வைத்துக்கொண்டு படாத பாடுபட்டார் ஆவுடையப்பன். சும்மா சொல்லக்கூடாது பெண்களுக்கும் படிப்பு தேவை என்பதற்காக இருந்த ஓரிரண்டு சொத்துக்களை விற்று முடிந்த அளவு அவர்களை படிக்க வைத்தார். படிப்பு ஏறி படித்த பெண்கள் குண்டலகேசியும் கோப்பெருந்தேவியும் தான்.மற்றவர்கள் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கே உன்னைப் பாரு என்னை பார் என்று இழுத்துக் கொண்டிருந்தார்கள்.


பள்ளிப்படிப்பை முடித்தவுடன் ஆளாளுக்கு கிடைத்த வேலைக்குச் சென்றுவிட கண்ணகி மாதவி கோப்பெருந்தேவி ஆகிய மூவரும் காதல் வயப்பட்டு காதலித்தவர்களையே மணந்து கொண்டார்கள். காதல் செய்து மணம் புரிவதால் சில சலுகைகளோடு வரதட்சனை குறைக்கப்பட்டது. சிந்தாமணிக்கும் மணிமேகலைக்கும் அவர்களை விட அதிக வயதுள்ள மாப்பிள்ளைகள் கிடைத்தார்கள். அவர்கள் தான் வரதட்சணை வேண்டாம் பெண்ணை மட்டும் கொடுங்கள் என்று முதலில் சொல்லிவிட்டு தாலி கழுத்தில் ஏறியதும் ஆவுடையப்பனை சுரண்டி கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு போனார்கள்.


வளையாபதிக்கு மட்டும் எந்த வரனும் அமையவில்லை. வந்த மாப்பிள்ளைகள் அனைவரும் அவளது பெயரை பார்த்து பின்னங்கால் பிடறியில் இடிபட ஓடிவிட்டார்கள். இலவு காத்த கிளி போல தனக்கானவனுக்காக காத்திருந்தாள் வளையாபதி. அவளின் முப்பதாவது வயதில் கேஷ் அண்ட் கேரி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த அவளின் பின்னால் சுற்றி உங்களால் போட முடிந்ததை போட்டு அனுப்புங்கள் என்று அவளைக் கட்டிக் கொண்டு போனான் அவளை விட நான்கு வயது சிறியவனான ஒருவன்.  வளையாபதிக்கு இதில் விருப்பமில்லை. ஆனால் இவனை விட்டு விட்டால் வேறு மாப்பிள்ளைக்கு எங்கே செல்வது.ஊர் ஆயிரம் பேசும்.. அந்த ஊரா இறுதியில் வந்து இவளுக்கு நல்லது கெட்டது பார்க்கும்.


இப்படியே ஒவ்வொருவராக திருமணமாகி சென்று அதன் பின்பும் ஆவுடையப்பனை நிம்மதியாக விடாமல் அது வேண்டும் இது வேண்டும் என மாதாமாதம் தந்தை வீட்டில் வந்து அமர்ந்து விடுவார்கள். படித்தால் ஜர்னலிஸம் தான் படிப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று படித்து முடித்துவிட்டு நாயாய் வேலை தேடி அலைந்து இறுதியில் தன் தந்தையிடம் படித்த ஒருவரின் ரெகமெண்டேஷனில் கிடைத்தது இந்த வேலை. அதுவும் நிரந்தரமாக இல்லை ஆறுமாதம் ட்ரெய்னிங்கில் சென்றது.  இந்த பேட்டியை நன்றாக எடுத்தால் வேலை நிரந்தரமாகிவிடும் என டைரக்டர் கூறியிருந்தார்.


ஆவுடையப்பனும் ரிட்டயர் ஆகிவிட்டார்.பாவம் ஏழு பெண்களை பெற்று மனிதன் துரும்பாகி விட்டார்..  காலையில் எழுந்து அந்த இரண்டு அறைகள் கொண்ட எலி பொந்து வீட்டில் வேலைகளை செய்து வைத்துவிட்டு தந்தைக்கு சமையல் செய்து தான் செய்த சமையலில் கொஞ்சத்தை எடுத்து டப்பாவில் அடைத்த வேலைக்கு சென்று விடுவாள் குண்டலகேசி.. தந்தை அரசாங்க ஊழியர் என்பதால் மாதாமாதம் பென்சின் வருகிறது..


அதையும் அக்காமார்கள் மாற்றி மாற்றி வந்து வாங்கிச் செல்கிறார்கள்.. தான், தான் இறுதியாக தந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டாள் குண்டலகேசி. ஏழும் பெண்ணாக பிறந்தாலும் அதனைப்பற்றி ஒரு நாள் கூட பெண்களிடம் குத்திக் காட்டி பேசாத நல்ல மனிதன் ஆவுடையப்பன். தாயில்லாத ஏழு பேரையும் நன்றாகதான் வளர்த்தார்..


கொசுக் கடிக்க தன் நினைவுகளிலிருந்து மீண்டு கொண்டாள் குண்டலகேசி.ஃபேன் ஓடவில்லை.அதனை வாங்க இப்பொழுது பணம் இல்லை. அதனால் நாளிதழை வைத்து விசிறி கொண்டு படுத்திருந்தார்கள் அவர்கள். கொசு வேறு விடாமல் தொல்லை பண்ண பேசாமல் போர்த்தி கொண்டு படுத்து விடலாமென  போர்வையை எடுக்க அதில் ஆயிரம் ஓட்டைகள்.அந்த ஓட்டைக்குள் புகுந்து அவளின் ரத்தத்தை மிதமாக ஸ்ட்ராவ் உறிஞ்சும் கொசுக்கள்.


மறுநாள் காலை எழுந்ததும் அவள் தன்னுடைய குளிர் காய்ச்சலை பொருட்படுத்தாமல் அந்த சிறைச்சாலைக்குச் சென்றாள். மீண்டும் சூப்பரின்டிடம் அவனின் மரணதண்டனையை உறுதி செய்து கொண்டாள். என்னதான் அனைவரும் அவ்வளவு உறுதியாக கூறினாலும் அவளின் மனம் நெருடிக்கொண்டே இருந்தது.  அவனுக்கு தூக்கு என்று கூறிய தினம் அவளுக்கு தூக்கமே வரவில்லை.  காலையில் முதல் வேலையாக சிறைக்குச் சென்றாள். ஜெயில் சூப்பரின்ட்


"அவன் செத்துட்டான்ம்மா..சாயங்காலம் வா அவன் டெத் சர்டிபிகேட் இருக்கும்.. அத பாத்துட்டு போ மனசுக்கு ஆறுதலா இருக்கும்" எனக் கூறி அனுப்பி வைத்தார். அடித்து பிடித்து சாயங்காலம் வேலைகளை ஒதுக்கி விட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு வந்தவளிடம் ஏகலைவனின் டெத் சர்டிபிகேட் காண்பிக்கப்பட்டது.உண்மையில் அவன் இறந்துவிட்டான்.. ஒரு உயிர் இந்த உலகத்தை விட்டுச் சென்றதற்கு சந்தோஷப்பட கூடாதுதான். ஆனால் குண்டலகேசி சந்தோஷப்பட்டாள்.. அவளின் சந்தோஷத்திற்கு இன்னொரு காரணம் அவள் வேலையில் நிரந்தரம் செய்யப்பட்டு விட்டாள்.


ஒரு தொல்லை விட்ட காரணத்தினால் நிம்மதியாக இருந்தாள் குண்டலகேசி. அவள் உண்டு அவள் வேலை உண்டு என  இருந்தவளின் சந்தோஷம் கடவுளுக்கு பிடிக்கவில்லை போல.திடீரென்று ஒருநாள் ஆவுடையப்பனுக்கு முடியாமல் போய்விட்டது.. குடலில் புண். பெருங்குடல் ரொம்பவே பாதிப்படைந்து விட்டது. இதில் அவருக்கு வேறு சக்கரை நோய் உள்ளது.மருத்துவர் உடனடியாக ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்று கூறிவிட்டார். ஆப்ரேஷன் செய்ய பணத்திற்கு எங்கே செல்வாள் குண்டலகேசி? தான் வேலை செய்யும் இடத்தில் பணம் கேட்டதற்கு  அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். லோன் போட்டு அவள் வாங்கிய பணம்  தந்தைக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுப்பதற்கு சரியாக இருந்தது.

ஆப்பரேஷன் செய்ய முடியாமல் வலியில் ஆவுடையப்பன் கதறுவதை கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தாள் குண்டலகேசி. அவளால் வேறு என்னதான் செய்ய முடியும்? பணத்திற்கு எங்கே எங்கேயோ சென்று முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறாள். அவளைப் பார்த்ததும் பல்லைக் காட்டும் பெரிய மனிதர்கள் சில்லரை தனத்தில் ஈடுபட அவர்களை காரி உமிழ்ந்து விட்டு வந்து விடுவாள் குண்டலகேசி.மகள் படும் வேதனையைப் பார்த்து தினம் தினம் கண்ணீர் விட்டார் ஆவுடையப்பன்.

மற்ற ஆறு பெண்களும் தந்தையின் நிலையைப் பார்த்து கண்ணீர் விடுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனத்தில் இருந்தார்கள். தான் உயிரோடு இருக்கும் போதே குண்டலகேசிக்கு இந்த நிலைமை என்றால் தானும் இல்லை என்றால் அவள் தனியாகி போவாளே என்ற பயம் ஆவுடையப்பனை பிடித்து ஆட்டியது. ஆவுடையப்பனின் நண்பர் ஒருவர் அவரின் நிலை கேள்விப்பட்டு பார்த்து செல்ல வீட்டிற்கு வந்தார். அவரிடம் ஆவுடையப்பன் தன் பயத்தை கூற தனக்கு தெரிந்த வீட்டில் ஒரு பையனுக்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல அழகியான குண்டலகேசியை பெண் பார்க்க அவர்களை வரச் சொல்லலாம். பெண்ணைப் பார்த்து பிடித்து விட்டால் வரதட்சணை கொடுக்க முடியாது மீடியாவில் வேலை செய்கிறாள் நல்ல சம்பளம் அது இது என மாப்பிள்ளை வீட்டார் மண்டையை கழுவி கட்டிக் கொடுத்து விடலாம் என யோசனை கூறினார் நண்பர். இந்த யோசனை சரியாகப்பட்டது.ஆவுடையப்பன் எதை எதையோ சொல்லி மறுத்து கொண்டிருந்த குண்டலகேசியை பெண் பார்க்கும் படலத்திற்கு சம்மதிக்க வைத்தார்.

சுந்தர் வந்தான் குண்டலகேசியை பெண் பார்க்க. பார்த்தவுடனே குண்டலகேசியின் அழகில் வாயை திறந்தவன் தான். திறந்த வாயை மூடவே இல்லை.  அவன் வீட்டில் உள்ளவர்கள் எப்படியாவது ஆவுடையப்பனிடம் சுரண்ட பார்க்க வரதட்சணை வேண்டாம் உங்கள் பெண்ணை மட்டும் கொடுங்கள் என்று ஒரே போடாக போட்டு விட்டான் சுந்தர்.ஏற்கனவே வந்த இரு மாப்பிள்ளைகளும் இதேபோல் கூறிவிட்டு தாலி கட்டியதும் சுரண்டி சென்றதை ஆவுடையப்பன் மெல்ல கோடிட்டு காட்டினார்..அருகே அமர்ந்திருந்த தன் தாயின் தலையில் அடித்து சத்தியம் செய்து கொடுத்தான் சுந்தர்.

குண்டலகேசியும் வேறு வழியில்லாமல் தந்தைக்காக இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்.. ஆவுடையப்பன் உடல்நிலையை கருத்தில் கொண்டு திருமணம் அடுத்த பத்து நாட்களில் முடிவு செய்யப்பட்டது.. திருமணத்திற்கு மூன்று நாள் இருக்கும்போது  குண்டலகேசி காணாமல் போய்விட்டாள்.

தொடரும்.

Comments

  1. Idhuk aprm tha .antha trailer scene varumo..semmma semma akka ..enak hero pathi therinjuka eager ah iurk..🖤🖤

    ReplyDelete
  2. Enga amma kooda poranthavangalum 6 girls than avudayapan mathiri enga grandpa kum 7 girls 😂😂😂 names ellam semma😉 .. apo egalaivan sagala kesi ya thookitan😜😜😉😉 semma epi akka😍😍😍🥰🥰👏👏

    ReplyDelete
  3. Story Vera level ah poguthu ka ultimate scenes na manimehalai..😂😂😂pooran kadichurucha...aprm..director 😂😂Manishan enama yosichu title soldraru 😂😂Tamil vathiyar Nalla than Peru vachurukar...I know kesi ah thookunathu namma jadamudi than 😂😂😍😍😍😍Vera level eagerly waiting for next

    ReplyDelete
  4. Super ud sis nice kesi appa best dha super egalaivan dha kesi ah kadathi irupangalo waiting for nxt ud sis stry kana dp super sis

    ReplyDelete
  5. Super arumai pochu thukkittu poitan aana seththutanu sonna kale wait

    ReplyDelete
  6. 🤔🤔🤔enka poi eruppa🤔🤔oru vela yekalaivan 🙄🙄🙄erukum vaaipu eruku😂

    ReplyDelete
  7. Semma semma sagi 👌👌👌👌

    ReplyDelete
  8. Etheeee kanuma 😁😁🙄🙄👌👌👌❤❤❤

    ReplyDelete
  9. Sonna mathiriye Aegaa Kesi ah thookittaano..🤣🤣 Aegaa va paaka waiting..🖤

    ReplyDelete
  10. Super avan sethu poitan nu death certificate katitanga aparam yapdi 🤔 avan vanthu kudathuvan.... Atutha ud trailer sceen varumo 👍👌💐

    ReplyDelete
  11. அச்சச்சோ ஏகலைவனா 🤔🤔🤔🤔🤔😳😳😳😳😳

    ReplyDelete
  12. Semmma sis..waiting for next ud..

    ReplyDelete
  13. Sema sis.. awesome writing.. 💕💕💕 eagerly waiting for next epi 😍😍😍

    ReplyDelete
  14. Interesting waiting hero story

    ReplyDelete
  15. ஏகலைவன் வந்துட்டான்னா

    ReplyDelete
  16. Analum unga name selection semma.. I cant control laughing while reading some lines. Awesome moving thennila sis..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்