39 நெருங்கினாள்(ல்)? இறுதி பாகம்


ஹேரி மற்றும் வந்தியதேவன் இருவரும் இந்த இரண்டு வருடமாக தவமிருக்கிறார்கள் குண்டலகேசியை பார்ப்பதற்கு.  அவர்கள் மட்டுமல்ல ஆவுடையப்பன் அவரது மற்ற மகள்கள் இப்படி அனைவருமே குண்டலகேசி எப்போது வருவாள் என்று வழி மேல் விழி வைத்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆவுடையப்பன் மட்டும் அவளின் தற்போதைய நிலையை அறிந்து அதை வெளியே சொல்ல முடியாமல் தனக்குள் ரகசியமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

 குண்டலகேசியின் ஆறு சகோதரிகளும் தினம் தோறும் பூஜை புனஸ்காரங்கள் செய்து தங்களுடைய சகோதரி விரைவாக வீட்டிற்கு வர வேண்டும் என்றும் அவள் எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

 இந்த இரண்டு வருடத்தில் ஹேரி மற்றும் வந்தியதேவன் இருவரும் தங்களுடைய இல்லீகள் தொழிலை விட்டுவிட்டு நன்முறையில் பிசினஸ் செய்து வருகிறார்கள். தனிமை வேண்டும் என்று கேட்டுச் சென்றாளா? அல்ல அந்த தனிமையை தங்களுக்கு பரிசாகக் கொடுத்து விட்டு சென்றாளா என்று இருவருக்கும் புரியவில்லை.அவள் இல்லாத இந்த தனிமை அவர்களை கொலையாய் கொன்றது.

 அவள் என்ன செய்கிறாள்?  யாரோடு இருக்கிறாள்? இப்படி அனைத்து கேள்விகளுக்கும் அவர்கள் நினைத்தால் நொடியில் பதிலை அடைந்து விட முடியும். ஆனால் இருவருமே அதனை செய்யவில்லை.  ஒருவேளை தாங்கள் விசாரிப்பது குண்டலகேசிக்கு தெரிந்து விட்டால் அவள் தவறாக ஏதாவது ஒரு முடிவைக் அணுகினால் அதனால் இழப்பு யார் பக்கம்? மேலும் அவர்களுக்கு அவளது இந்த தனிமை நியாயமாகப் பட்டது.

அவள் யோசிக்க வேண்டும் இரண்டு ஜென்மங்களையும் கருத்தில் கொண்டு யோசிக்க வேண்டும்..அதனால் அவள் தனியாக இருப்பது மட்டும் தான் நல்லது.ஹேரி அவளுடன் வாழ்ந்த அந்த மாளிகையில் தனியாக வசிக்கிறான். அவளோடு கட்டி புரண்ட அந்த கட்டிலில் அவன் மட்டும் இப்போது தனியாக புரண்டு கொண்டிருக்கிறான் அவளது நினைவுகளோடு. தான் சுயநலமாக செய்த தவறு இவ்வளவு தூரம் கொண்டு வந்துவிடும் என அவன் நினைக்கவே இல்லை.

இந்தப் பக்கம் வந்தியதேவன்.கொஞ்ச நஞ்சம் இருந்த கடவுள் நம்பிக்கையும் அவனுக்கு அடியோடு செத்து விட்டது.அவன் யாருக்கு என்ன தீங்கு செய்தான். நந்தனாக இருக்கும் போது நாட்டுக்காக போராட நினைத்தான். அந்த நினைப்பு அவனுக்கு வராமல் இருந்திருந்தால் அவன் அழகியை இழக்க வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்திருக்காதே.. இந்த ஜென்மத்தில் அவன் எதற்காக பைத்தியக்காரி யான ஒரு அம்மாவிற்கு பிறக்க வேண்டும். அந்த பைத்தியத்தை கூட விட்டு வைக்காமல் எவனோ ஒருவன் தன் காம இச்சையை தீர்த்துக் கொள்ள வேண்டும்?

பைத்தியமாக இருந்தாலும் அவனின் தாய் அல்லவா. அவள் உயிரோடு இருந்திருக்கலாமே.  அப்படி அவள் உயிரோடு இருந்திருந்தால் அவன்  ஏன் ஒரு கொலையை செய்து விட்டு ஓடி வர வேண்டும்?  அவனின் வாழ்வும் அதோடு வழிமாறி இறுதியில் தூக்கு தண்டனை கைதியாக சிறை சென்று அங்கே தன்னை பேட்டி எடுக்க குண்டலகேசி வர அவளைக் கண்ட நொடி இதயமே நழுவி அவள் காலடியில் விழ கண்டானே எல்லாம் எதற்காக?  இப்படி நாசமாய் போகவா?


அவளோடு வாழவே முடியாதா?  நினைத்து பார்க்கும் போதே நெஞ்சம் உடைய கண்டான்.வந்தியதேவன் நிலைமை இப்படியிருக்க குண்டலகேசி அங்கே தன் மகனுடன் போராடிக் கொண்டிருந்தாள்.

"டேய் உதயா ராசா அம்மாவால முடியலடா.. இடுப்பே உடைஞ்சிரும் போல.. வந்து ஒரு வாய் வாங்கிக்கோடா.."

"நோ ம்மா"

"நோ நொம்மாவா.. அடேய் சில்வண்டு, எம்புட்டு நேரம் பெரிய மனுஷி நான் கையில தட்டோட உன் பின்னாடி ஓடிட்டு இருக்கேன். ஒரு மட்டு மறுவாதி வேணா? இப்ப நீயா வரியா இல்ல பெல்ட் எடுக்கவா.. ச்சி ச்சி ச்சி இப்பலாம் பொறக்குற புள்ளைங்க என்ன இப்படி இருக்குங்க.. (நாங்கலாம் அம்மா ஒன்னு அப்டினு எண்றதுக்குள்ள ஆஜர் ஆயிடுவோம் 90s கிட்ஸ் பரிதாபங்கள்)

குண்டலகேசி உதயுடன் போராட அவனோ அவளுக்கு போக்கு காட்டி இறுதியில் அவளிடம் சிக்கி இரண்டு கொட்டை பரிசாக பெற்று ஆஆ என வாயை பிளந்து அழ கேசி அது தான் சாக்கென்று சோற்று உருண்டையை வாயில் திணித்தாள். இப்படி தான் அவள் பொழுதுகள் மகனோடு பறக்கிறது..

 திடீரென தொலைபேசி அழைப்பு வர எடுத்துப் பார்த்தவள் திரையில் அப்பா என்று மின்ன "ஹெலோ ப்பா.. சொல்லுங்க என்ன பண்றிங்க.. சாப்டாச்சா..மருந்து சாப்டிங்களா.. கொஞ்சம் நேரம் படுத்து தூங்கமா என்னத்துக்கு இப்ப முழிச்சு இருக்கிங்க?"

"சொல்லுங்கப்பானு சொல்லிட்டு நீயே பேசிட்டு இருக்க.. எப்பவும் தூங்குறது தானே.. ஒரு நாள் தூங்கலனா இடி விழுந்துராது..நீ வர போற விஷயத்த உன் அக்காங்க கிட்ட சொல்லப் போறேன் டா.. பாவம் எல்லோரும் உனக்கு என்னவோ ஏதேனோ பதறி கெடக்காங்க "

"ஒன்னும் வேணா.. நா நாளைக்கு வர போறேன். திடீர்னு போனவ திடிர்னு வந்தவளா இருக்கட்டும்.. அப்பா உங்களுக்கு வேற ஏதாச்சும் வாங்கணுமா"..

"ஒன்னும் வேணா குண்டம்மா நீ வாடா அது போதும்.. எங்க உதய் குட்டி"

"அவனுக்கு சோறு ஊட்டிட்டி ரெண்டு வெச்சு படுக்க வெச்சிருக்கேன்..அப்றம் அடிக்குறேன் ப்பா.. நீங்க போயி தூங்குங்க"அதோடு ஆவுடையப்பன் அழைப்பை துண்டித்து விட்டு தனது மதிய தூக்கத்தைத் தொடர சென்றார். தூக்கம் வந்தால் தானே நாளை அவரது அன்பு மகள் வரப் போகிறாள்.. இரண்டு வருடங்கள் கழித்து அவளைப் பார்க்கப் போகும் நொடிக்காக ஆவுடையப்பன் ஒருவாரமாக பரபரப்போடு காத்திருக்கிறார்.

 குண்டலகேசி வரப்போவதை குறித்து அவர் யாரிடமும் கூறவில்லை. அதற்கு குண்டலகேசி அனுமதிக்கவும் இல்லை. திடீரென்று அவள் மாயமாய் மறையும் போது அனைவருக்கும் என்ன மாதிரியான மனநிலை இருந்ததோ இப்பொழுது அவள் திரும்ப வரும் போதும் அதே மனநிலை தான் இருக்கப் போகிறது. என்ன அதை விட இப்பொழுது ரத்த அழுத்தம் உயரும். காரணம் உதய் சரண்.

குண்டலகேசி உறங்கும் மகனை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.அந்த வீட்டில் அவளும் அவளது மகனும் மட்டும் தான் இருக்கிறார்கள். மேல் வீட்டில் இருக்கும் அதாவது மேல் அப்பார்ட்மென்டில் இருக்கும் சங்கரன் புவனா தம்பதிகள் இவள் வீட்டில் இல்லாத போது  உதயை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் இல்லையென்றால் இந்நேரம் குண்டலகேசி இல்லை.

உதய் அவர்களுக்கு சொந்த பேரன் போல.. இப்பொழுதே புவனா புலம்பிக் கொண்டே இருக்கிறார். உதய பாக்காம எப்படி இருக்கப் போறனோ என்று.. என்னவோ அந்த வாண்டு கண்காணாத தேசத்திற்கு செல்வதைப்போல அவன் விரும்பி உண்ணும் உணவு பதார்த்தங்கள் முதல்கொண்டு விளையாட்டுப் பொருட்கள் அது இது என மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறார் புவனா. சங்கரன் அவரை தடுத்து நிறுத்துவார் என்று பார்த்தால் அவரும் மூட்டை கட்டுவதில் மனைவிக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.

உதய் தனது வசீகர புன்னகையால் அங்கிருக்கும் பலரை தன் வசப்படுத்தி இருந்தான். இந்த இரண்டு வயதில் அவன் ஓரளவு நன்றாகவே உச்சரித்து பேசக் காரணம் குண்டலகேசி. மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேண்டுமா அதுபோல் குண்டலகேசி பெற்ற குட்டி வாண்டுக்கு பேச சொல்லிக் கொடுக்க வேண்டுமா?ஹேரி மற்றும் வந்தியதேவன் இருவரும்  உதயை பார்த்தால் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

 அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? அப்பா சொல்லியதை வைத்து பார்த்தால் அவர்கள் இருவரும் இரண்டு வருடத்திற்கு முன்பு ஒருநாள் அப்பாவிடம் சென்று  என்னை பற்றி விசாரித்து இருக்கிறார்கள்.. அப்பா அவர்களிடம் என்னை தனியாக விட்டு விடும் படி கேட்டுக் கொண்டதன் பொருட்டு  அவர்கள் இருவரும் அமைதியாக இருக்கிறார்கள். இது நாள் வரை அந்த வேண்டுகோளை அவர்கள் காலில் போட்டு நசுக்கிறாமல் காப்பாற்றி வருகிறார்கள் என்று நேற்று பேசும் போது கூட அப்பா கூறினாரே..


" கடவுளே என்ன நடந்தாலும் எனக்கு மன தைரியத்தைக் கொடு..ஹேரி வந்தியதேவன் இவங்க ரெண்டு பேர்ல  ஒருத்தன் என் வாழ்க்கைனா அது யாராயிருக்கும்? இன்னும் நான் ஒரு நிலையான முடிவு எடுக்கல.. எந்த முடிவு எடுத்தாலும் என்கூட நீ துணையா இரு"...

 குண்டலகேசி மானசீகமாக வேண்டுதல் வைத்தபடி நாளை ஊருக்கு கிளம்ப அனைத்தையும் பேக் செய்து கொண்டிருந்தாள். இரவு உணவு சங்கரன் வீட்டில். புவனா வழக்கம்போல  உதய்க்கு கதை சொல்லிக்கொண்டே உணவூட்ட சங்கரன் மெல்ல தன் பேச்சை ஆரம்பித்தார்.

"கேசி என்ன முடிவு பண்ணிருக்க.."

"எத பத்தி அங்கிள்"

"உனக்கே தெரியும் கேசி.. இந்த ரெண்டரை வருசத்துல நீயா ஒருதடவ கூட உன் முன்னால் வாழ்க்கைய பத்தியோ உன்னோட புருஷனப் பத்தியோ பேசினது கிடையாது. உன்னோட அப்பா கிட்ட மட்டும் தான் பேசுவ.. இப்படியே உன் மனசுக்குள்ளேயே போட்டு புதைச்சு வச்சுட்டு எத்தன நாளுக்கு நீ இருக்க போற.. உன்ன விடு  உன் பையனுக்கு அப்பா வேணாமா..

 கேசி.. நீ எதையும் எங்ககிட்ட வாய் விட்டு சொல்ல மாட்ட. பரவால்ல. ஆனா நீ பெரிய அடிபட்டு இருக்க. அந்த வலி இன்னும் உன் கண்ணுல இருக்கு.. எது செஞ்சாலும் யோசிச்சு செய்.. உனக்கு எப்பவும் நாங்க இருக்கோம்.. ஆனா நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி குடும்பம் புருஷன் பிள்ளை அப்படின்னு வாழனும்னு எங்களுக்கு ஆசை இருக்கு..

நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்.ஒன்னுக்கு நூறு தடவை யோசிச்சி முடிவு பண்ணு.." சங்கரன் தான் கூற வேண்டியதை சொல்லி முடித்து உண்ணுவதில் முனைப்பு காட்டினார். புவனா தான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பது போல அவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஏனென்றால் இத்தனை நாட்களாக அவர் இதையே தான் பாடிக் கொண்டிருந்தார். புதிதாகக் கூற என்ன இருக்கிறது? இரவு ஃபோனில் ரேவதி, சங்கரன் கூறியதை மீண்டும் ஒருமுறை குண்டலகேசியிடம்  கூறினாள்.அனைவரின் பேச்சையும் கேட்டு குண்டலகேசி பதில் சொல்லவில்லை. மறுநாள் காலை எழுந்து கிளம்பி மகனைக் கிளப்பி  அவள் வெளியே வர சங்கரன் புவனா தம்பதி தயாராகி அவர்களுக்காக கார் பார்க்கில் காத்துக் கொண்டிருந்தார்கள்.

 தாய் மகன் இருவரையும் விமான நிலையத்தில் வழியனுப்ப அவர்கள் இருவரும் வந்திருந்தார்கள். புவனா ஆயிரம் பாத்திரங்கள் கூறி குண்டலகேசியை அனுப்பி வைத்தார். குண்டலகேசியின் மனம் அந்த விமான பறவையின் உள்ளே தத்தளித்துக் கொண்டிருந்தது.

 இந்நேரம் அவர்கள் இருவருக்கும் தெரிந்திருக்கும்.. ஒருவேளை தெரியாமல் கூட இருக்கலாம். இவ்வளவு ஏன் தன்னை அவர்கள் மறந்து கூட போயிருக்கலாம். இல்லையென்றால் உதய் பிறப்பு பற்றி அவர்களுக்கு எப்படி தெரியாமல் போயிருக்கும்.  பக்கத்தில் உதய் ஐ பேடில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தான்.

 பலவிதமான யோசனைகள் எண்ணங்கள் இப்படியான அலைக்களிப்பில்  ஒருவழியாக தாய் நாடு வந்து சேர்ந்தாள் குண்டலகேசி.எங்கே ஆவுடையப்பன் விமான நிலையத்திற்கு வந்து காத்திருப்பாரோ என்ற ஒரே எண்ணத்தில் குண்டலகேசி தான் வரும் நேரத்தை அவரிடம் சொல்லவில்லை. முன்கூட்டியே டிராவல் ஏஜென்சியில் பதிவு செய்திருந்த வாகனம் அவளுக்காக காத்திருந்தது.அதில் ஏறி தன் மகனோடு தன்னுடைய பிறந்த வீட்டிற்குச் சென்றாள்.

 வழி நெடுகிலும் உதய் மழலையில் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தான். அவனுக்குப் புரியும் விதத்தில் பதிலை கூறிக் கொண்டே வந்தவள் கண்கள் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தது. இந்த இரண்டு வருடத்தில் அவளுக்கு பெரிய மாற்றம் இல்லை என்றாலும் சென்று வந்த இடங்கள், சில பசுமையான நினைவுகள், பல அவமானங்கள், இப்படி  அந்த சுற்றுப்புறம் அவளுக்கு பல வகையான எண்ணங்களை தோற்றுவித்தது.

 ஒரு வழியாக வீட்டின் முன் வந்து கார் நிற்க ஆவுடையப்பன் வண்டி சத்தம் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.  குண்டலகேசி அவரைக் கண்டதும் வேகமாக காரில் இருந்து இறங்க தன் மகளைக் கண்ட ஆவுடை தன்னுடைய வயதையும் மீறி ஓடி வந்து குண்டலகேசியை கட்டிக் கொண்டார். நடுங்கும் கரங்களால் அவளின் முக வடிவை அளந்தார்.. மகளின் நெற்றியில் பாசத்தோடு முத்தமிட்டார்.

 அவர் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்த குண்டலகேசி"அப்பா ஏன் அழறீங்க. நான்தான் வந்துட்டேன் இல்ல.. இனிமே உங்கள விட்டு போக மாட்டேன்.. என்ன மட்டுமே கவனிக்குறீங்க.. ஒரு பெரிய மனுஷன் உங்க பக்கத்துல நின்னுட்டு இருக்கான்..அவன நீங்க கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க" குண்டலகேசி கூறிய பின்புதான் ஆவுடையப்பன் தன்னுடைய பேரன் அங்கே நிற்பதை கவனித்தார்.

 கொழுகொழுவென அடர்த்தியான சிகை அவன் கழுத்து வரை வளர்ந்திருக்க முன் நெற்றியை மறைத்து விழுந்து புரண்டது கேசம். ஆவுடையை வீடியோ காலில் பார்த்து பேசிருந்த உதய்க்கு அவர் தன்னுடைய தாத்தா என்று அடையாளம் தெரிந்திருந்தது. அழகாக கன்னக் குழி விழ அவன் சிரிக்க  ஆவுடையப்பன் அவனை வாரி எடுத்து முத்த மழை பொழிந்தார்.

 இதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் எட்டிப்பார்க்க தன்னுடைய பொருட்களை எல்லாம் தூக்கி கொண்டு வீட்டிற்குள் வந்தாள் குண்டலகேசி. அவள் பின்னோடு பேரனோடு கொஞ்சிக் கொண்டு வந்தவர் "ஏம்மா வர நேரத்த சொல்லிருந்தா அப்பா ஏர்போர்ட் வந்துருப்பேன் தான.."

"எதுக்குப்பா அதான் நானே வந்துட்டேனே..ஆமா என்ன சமைச்சு வச்சு இருக்கீங்க ரொம்ப பசிக்குது.."

" நீ எத்தன மணிக்கு வருவேன்னு எனக்கு தெரியல.. அதனால காலையிலேயே எந்திரிச்சு  உனக்கு பிடிச்சதை எல்லாம் சமைச்சு வச்சிருக்கேன்.நீ போய் குளிச்சிட்டு வா. அப்பா உனக்கு ஊட்டி விடுறேன்.." குண்டலகேசி முதலில் உதயை குளிப்பாட்டி ஆடை அணிவித்து ஆவுடையப்பனிடம் விளையாட விட்டுவிட்டு தான் குளிக்க சென்றாள்.

 அவள் குளித்து வருவதற்குள் ஆவுடையப்பன் பேரனுக்கு உணவு ஊட்டி அவனுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்.  குண்டலகேசி வந்ததும் ஒரு பெரிய தட்டு நிறைய அவருக்குப் பிடித்த உணவு வகைகளை வைத்து தன் கையாலேயே அவளுக்கு ஊட்டி விட்டார்.  அம்மாவுக்கு தாத்தா ஊட்டி விடுவதை கண்ட அந்த வாண்டுக்கு ஒரே சிரிப்பு.

 புதிய இடம் புதிய சூழ்நிலை உதய் துருதுருவென அங்கே இங்கே ஓடிக் கொண்டிருந்தான். இங்கே அப்பா மகள் இருவரும் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள். "ப்பா அக்காங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டீங்களா...'

" சொல்லிட்டேம்மா அவங்க எல்லாரும் இன்னைக்கு ராத்திரிக்குள்ள வந்துருவாங்க.." அதற்கு அப்புறம் இத்தனை நாள் நடந்த விஷயங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள அதற்கிடையில் உதய் உறங்கியே விட்டான்..  தந்தை கையால் நன்றாக உண்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க தனது அறைக்கு சென்றாள் குண்டலகேசி.

 மாலையும் அவளது நேரம் ஆவுடையப்பன் மகனோடு கழிய இரவு நெருங்கும் வேளை அவளது ஆறு சகோதரிகளும் வந்து சேர்ந்தனர்."எங்கடி போன. சொல்லிட்டு போக மாட்டியா. உன்ன எங்க எல்லாம் தேடுனோம்.. என்னடி ஆச்சு உனக்கு.." இப்படி ஆறு சகோதரிகளும் குண்டலகேசியை பிடித்து உலுக்கி கொண்டிருக்க உதய் ஆவுடையப்பன் கழுத்தை கட்டிக்கொண்டு அவர்களை மிரட்சியாக பார்த்தான்.

உதயை பார்த்தவர்கள்" யாருடி இந்த பையன்.. "

" என் பையன் தான் " குண்டலகேசி அசராமல் பதில் சொல்ல அந்த ஆறு பேரும் தான் அசந்து விட்டனர்.அப்படி என்றால் குண்டலகேசி இங்கிருந்து செல்லும் போது அவள் கர்ப்பமாக இருந்திருக்க வேண்டும் என்று அவர்கள் மூளைக்கு புரிந்தது.என்னதான் இருந்தாலும் பிரியமான சகோதரி. இத்தனை காலம் கழித்து மீண்டும் தங்களை காண வந்திருக்கிறாள். அவள் மனதில் என்ன இருந்ததோ எப்படியும் இன்று அவர்கள் வாழும் நல் வாழ்க்கைக்கு முக்கிய காரணம் அவள் தான்.அவள் வந்ததே போதும்.வந்த கதை போன கதை அனைத்தையும் பேசி அவள் மனதை காயப்படுத்த அவர்கள் விரும்பவில்லை.

 அங்கே அழகாக நீல விழிகளில் தங்களை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்த மகனை காண்கையில் அந்த ஆறு அன்புச் சகோதரிகளுக்கும் மனதை என்னவோ செய்தது. ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக்கொண்டு  உதயிடம் ஓடி அவனைத் தூக்கி கொஞ்சினார்.. "பயப்படாத செல்லம்.நாங்க எல்லாரும் உன் பெரியம்மா. எங்க பெரியம்மா சொல்லு.."உதய் முதலில் மிரண்டாலும் பிறகு அவர்களிடம் நன்றாக ஒட்டிக் கொண்டான்.

 குண்டலகேசி ஒரு காட்சிப்பொருளாக இவ்வளவு நேரம் அங்கு நின்று கொண்டிருந்த அக்கா கணவன்மார்களை பார்த்து" எப்படி இருக்கீங்க மாமா.. என்ன எதுவுமே பேச மாட்டேங்கிறீங்க.. பசங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க.. "

"எல்லாரும் நல்லா இருக்காங்க.நீ எப்படி இருக்க. உன் பையன் ரொம்ப அழகா இருக்கான். எத்தன நாள் இங்க இருக்க போற.. ஒரு நாலஞ்சு நாள் பையனை கூட்டிட்டுட்டு நம்ம வீட்டுல வந்து தங்கிட்டு போ"

 வைரமுத்து தான் இவ்வாறு பேசுவதா? குண்டலகேசி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டாள். இத்தனை நாட்களில் அவர்களின் மாற்றம் அவளுக்கு நன்றாக புரிந்தது. இதுவே முன்பானால் அவர்கள் ஆறு பேரின் பேச்சும் இந்நேரம் சந்தி சிரிக்க வைத்திருக்கும். இப்பொழுது வாயை திறக்கவே காசு கேட்பார்கள் போல்.

 அவர்களது பிள்ளைகள் அனைவரும் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஹேரி தான் முன்பு வாக்கு கொடுத்தது போலவே அந்த அவர்களது பிள்ளைகள் அனைவரும் படிக்கும் செலவை தனதாக்கிக் கொண்டான். அதைப்பற்றி குண்டலகேசி கருத்து கூற விரும்பவில்லை. அது அவனது பணம் அவனது ஆசை. அதைத் தடுக்க அவள் யாரென்று இருந்து கொண்டாள்?

இரவு சகோதரிகளின் அரட்டை அந்த வீட்டை கலகலப்பாக மாற்றியது. ஆனாலும் அவர்கள் அனைவரும் குண்டலகேசிக்கு அறிவுரை கூற மறக்கவில்லை. ஹேரி பற்றி அவர்களுக்கு தெரியாததால் அனைவரும் வந்தியதேவன் தான் அவள் கணவன் என்ற ரீதியில் என்ன தகராறு இருந்தாலும் அவனோடு சேர்ந்து வாழ் என்று அவள் மண்டையை கழுவிக் கொண்டிருந்தார்கள்.

 அதை அனைத்தையும் கேட்டுக் கொண்டு பதில் பேசாமல் அமர்ந்திருந்தாள் குண்டலகேசி.ஒரு கட்டத்தில் அவர்களே சலித்துப் போய் வாயை மூடிக்கொள்ள அந்த இரவு குழப்பத்தோடே முடிந்து போனது. மறுநாள் காலையில் உணவு முடிந்து சகோதரிகள் அனைவரும் விடை பெற  அவர்கள் அந்தப் பக்கம் கிளம்பியதும் இந்த பக்கம் குண்டலகேசி ஹேரிக்கு அழைத்தாள்.

 ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வர வேலை விஷயமாக ஃபைலில் மூழ்கியிருந்த ஹேரி அசுவாரசியமாக எடுத்து" ஹலோ"என்றான்.

" ஹலோ நான் குண்டலகேசி பேசுறேன் " என்ற குரலை கேட்டதும் கையில் இருந்த பையில் நழுவி விழுந்தது.

"ஹெ.. ஹெலோ பேபி..பேபி".. திக்கித் திணறினான் ஹேரி..

"ம்ம் நான் தான்.. இப்போ நான் என் வீட்லதான் இருக்கேன். நான் உன்ன பாக்கணும்.. இன்னும் நீ அந்த மாளிகை வீட்ல தான் இருக்கியா."

"ஆமா பேபி.. நீ.. நீ எப்படி இருக்க.. நான் உடனே"

"தயவு செஞ்சு இங்கே வராதே.. நீ அந்த வீட்டு லொக்கேஷன் எனக்கு ஷேர் பண்ணு.. நானே வரேன்.. எனக்கு உன் கிட்ட பேசுறது  இருக்கு.."

"இல்ல பேபி நான்"

" நீ எதுவும் பேச வேணாம். லொகேஷன் மட்டும் ஷேர் பண்ணு. இல்லனா சொல்லு  நான் உன் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன்.. "

" இல்ல பேபி இல்லை. நான் லொகேஷன் சேர் பண்றேன்.."

"குட்" அதோடு அழைப்பை துண்டித்தாள் குண்டலகேசி.ஹேரி தலை கால் புரியாமல் அமர்ந்திருந்தான். அவள் வந்து விட்டாளா?  என்னை பார்க்க வருகிறாளா? என்னை பார்த்து வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ? ஒருவேளை அவனுக்கும் அழைத்து பேசியிருப்பாளோ? அதோடு அவனுக்கு எந்த வேலையும் ஓடாமல் அவள் கேட்டது போல அந்த வீட்டின் முகவரியை அவளுக்கு அனுப்பி வைத்துவிட்டு  வேகமாக கிளம்பி வீட்டிற்கு சென்றான்.

 இப்பொழுது குண்டலகேசி வந்தியதேவனுக்கு அழைத்தாள். ஆண்கள் இருவரும் அவர்கள் கை தொலைபேசி எண்ணை மாற்ற வில்லை. என்றாவது ஒருநாள் குண்டலகேசி அவர்களுக்கு அழைப்பாள் என்ற நம்பிக்கைதான்.. அவன் வேலை விஷயமாக  காரில் சென்று கொண்டிருக்கும் போது புது எண்ணிலிருந்து அழைப்பு வர யோசனையாக எடுத்து காதில் வைத்தான்.

"ஹெலோ"

"ஹெலோ நான் குண்டலகேசி" அவ்வளவுதான் சடன் பிரேக் போட்டு காரை ஓரமாக நிறுத்தினான். வியர்த்து வழிய நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள 

" ஹலோ குட்டி.. நீயா.. உண்மையாவே நீதான் பேசுறியா.. நீ இங்க வந்துட்டியா.. நான் உடனே உன்ன பார்க்க வரேன்.. நீ எங்க இருக்க.. மொத நீ எப்படி இருக்க.."

" நீ என்ன பார்க்க வரவேண்டாம்..அந்த மாளிகை வீடு தெரியும் தானே.."

" ஆமா அது என் வீடு தான். ஆனா  அந்த ஹேரி என்ன மாதிரியே உன்கூட அந்த வீட்டில வாழ்ந்துருக்கான்.. அதனால நான் அந்த வீட்ட வேற ஆளுக்கு வித்துட்டேன். அப்பவும் அந்த ஆளு கிட்ட இருந்து  ஹேரி டபுள் மடங்கு விலை கொடுத்து அந்த வீட்ட  வாங்கிருக்கான்.."

"ப்ச் நான் தெரியுமான்னு கேட்டேன்"

"தெரியும்.."

"நான் ஈவினிங் அங்க வருவேன்.. நீயும் வா.. உன்கிட்ட பேசணும்"

"ஓகே குட்டி.. நீ நல்லா இருக்கல்ல"

"வந்துரு" அழைப்பு துண்டிக்கப் பட்டது. வந்தியதேவனுக்கு கைகால் ஓடவில்லை. எப்படி வந்தாள்? எப்போது வந்தாள்? எனக்கு தான் முதலில் அழைக்கிறாளா? அவனுக்கும் அழைத்து வரச் சொல்லி இருப்பாளா? உடனே அவளைப் பார்க்க வேண்டுமே. அடுத்த பிளைட் பிடித்து சென்னை வந்து சேர்ந்தான். அவனுக்காக கார் அங்கே காத்து நின்றது.  அதில் ஏறி ஹேரியின் மாளிகைக்குச் சென்றான். ஒரு காலத்தில் அந்த வீட்டில் குண்டலகேசியோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று எண்ணம் அவனால் பொங்கி வழிந்தது.

 இப்போதும் அந்த எண்ணத்தில் மாற்றம் இல்லை. ஆனால் இந்த வீடு வேண்டாம் இந்த ஊரே வேண்டாம். எங்கு அவர்கள் வாழ்க்கை முடிந்ததோ இப்போது அதே இடத்தில் வந்து நிற்கிறது. அவள் ஈவினிங் வருவதாக கூறியிருந்தாள்..ஆனால் வந்தியதேவன் சில மணி நேரம் முன்னதாகவே வந்து அவளுக்காக காத்து இருந்தான்.  அன்று அவள் உயிர் விட்ட அந்த குளத்திற்கு நடந்து சென்று அப்படியே அமர்ந்து தன் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தான்.

 மாலை ஆனது. குண்டலகேசி வெகு அழகாக கிளம்பிக் கொண்டிருந்தாள். ஆவுடையப்பன் அவள் எங்கே செல்கிறாள் என்று கேட்பதற்கு வாயை திறக்க அதற்கு முன்பாகவே  " அப்பா நான் ஒரு முக்கியமான இடத்துக்கு போறேன். உதய கூட கூட்டிட்டு போறேன்.. போயிட்டு எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் திரும்பி வருவேன்."

 யாரை தேர்ந்தெடுத்து இருக்கிறாய் என்று கேட்பதற்கு வாய் துருதுருத்தாலும்  அந்தக் கேள்வியை தன்னுள் புதைத்து கொண்டார் ஆவுடையப்பன். இது அவளது வாழ்க்கை. முதல் நாள் அவளை விமான நிலையத்தில் ஏற்றிய வண்டியே இப்போதும் வந்து வாசலில் நின்றது. எங்கே போகிறோம் என்று அந்த வாண்டு  விடாமல் நச்சரிக்க  அதற்கு பதில் கூறாமல் தூக்கிகொண்டு சென்றாள்.

 எவ்வளவு நேரம் தான் குளக்கரையில் அமர்ந்து இருப்பது. மணி மாலையானதும் வந்தியதேவன் மான ரோஷத்தை விடுத்து  ஹேரியின் வீட்டு வாசலில் வந்து காரை நிறுத்தினான். ஒருவேளை குண்டலகேசி தான் வந்திருக்கிறாளோ என்று ஓடி வந்தான் ஹேரி. அங்கே வந்தியதேவனை கண்டதும் அவன் முகம் சுருங்கியது.

 அவனது முகம் மாற்றத்தைக் கண்டு கொண்ட வந்தியதேவன் " குண்டலகேசி தான் இங்க வரச்சொன்னா" என்றதோடு தனது கார் முன்னால் சாய்ந்து நின்று கொண்டான். இன்று ஏதோ ஒரு சம்பவம் இருக்கிறது என்ற நோக்கத்தோடு அழகிய தோட்டத்தில் நடை பயின்றான் ஹேரி.

 கார் அந்த மாளிகை உள்ளே நுழைந்தது. குண்டலகேசியின் எண்ணங்கள் பின்னோக்கி பறந்தது. இந்த தென்னந்தோப்பில் உள்ளே புகுந்து தானே மெயின் ரோட்டிற்கு ஓடிவர அவள் முயற்சி செய்தாள். அப்போது அவள் எங்கும் தப்பித்து விடக்கூடாது என்று மின்சார வேலி போடப்பட்டிருந்தது. இப்பொழுதும் இருக்கிறது ஆனால் அவள் வருகிறேன் என்று கூறியதும் இன்று மின்சாரத்திற்கு ஓய்வு.

 
 நெஞ்சம் படீரென்று அடித்துக் கொள்ள தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தாள். கார்  ஹேரி வீட்டு முன்பு நின்றது. சத்தம் கேட்டு வந்தியதேவனும்  ஹேரியும் ஓடி வந்து நின்றனர். அவர்களை பார்த்தவள் நீண்ட மூச்சை எடுத்து தன்னை சமன் செய்து டிரைவரிடம்" அண்ணா நீங்க மெயின் ரோட்டுல வெயிட் பண்ணுங்க.. நான் கால் பண்ணனும் வாங்க" என்றாள்.

 முதலில் இறங்கினாள் குண்டலகேசி.ஹேரியும் வந்தியதேவனும் வாயைப் பிளக்க குனிந்து உள்ளே தன் மகனை தூக்கினாள். குழந்தையைப் பார்த்ததும் இரண்டு ஆண்களுக்கும் மயக்கம் வராத குறை. ஏனென்றால் உதய் சரண் தோற்றத்தில் வந்தியதேவனை போல இருந்தாலும் அவனின் அந்தக் கண்கள் நீலநிறத்தில் ஹேரி போல இருந்தது.

 கார் அந்த இடத்தை விட்டு மறைந்ததும்"ம்மா இங்க ஏன்"உதய் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்களை கண்டதும் பயந்து தாய் கழுத்தை கட்டிக் கொண்டான்.

"கண்ணா ஒன்னும் இல்ல மா.. இவங்க அம்மாவுக்கு தெரிஞ்சவங்க.. கொஞ்சம் நேரம்".. அவன் தலை கோதி கண்ணத்தில் முத்தம் வைத்தால் குண்டலகேசி.

 ஹேரி வந்தியதேவன் இருவருக்கும் வார்த்தை வரவில்லை."பேபி இது நம்ம.. என்"..

"என்னோட பையன்.. உதய் சரண் சன் ஆஃப் குண்டலகேசி"..ஹேரி திக்கித் திணற வந்தியதேவன் இதயம் வெளியே வந்து விழுந்து விடும் படி இருந்தது. அதற்கு இன்னொரு காரணம் குண்டலகேசியின் உருவ மாற்றம்.என்பத்து ஐந்து கிலோவிலிருந்து  இப்பொழுது சைஸ் ஸிரோ அழகியாக வந்து நின்றாள். கொழுகொழு கன்னங்கள்.. உருண்டையான கை கால்கள். முட்டைக்கண்.. அடுக்கான கழுத்து.. இப்படி எதையும் அவளிடம் காணவில்லை.

பேரழகுப் பெட்டகமாக கண்முன் நின்று கொண்டிருந்தாள். அவற்றைவிட முக்கியமாக அவர்கள் கண்ணில் விழுந்தது அவளது கம்பீரம். முன்னாடியே அவள் தைரியமானவள் தான். ஆனால் இப்பொழுது அவளிடம் ஏதோ ஒரு மாற்றம். இரண்டு ஆண்களும் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க

" என்னடா சொல்லாம கொள்ளாம ஊரைவிட்டு ஓடுனவ திரும்பி வந்துருக்கானு பாக்குறீங்களா.. தலைவர் பாணியில சொல்லனும்னா பழைய கணக்க திருப்பிக் கொடுக்க வந்திருக்கேன். இவன் யாருன்னு உங்களுக்கு தெரியுதா.. ஹேரி உனக்கு தெரியுதா.. உனக்கு தான் முக்கியமா தெரியணும். நீ கூடுவிட்டு கூடு பாஞ்சி தேவா உடம்புல புகுந்து என் கூட சேர்ந்து நடத்துன காம லீலா வினோதங்கள் ஞாபகத்துக்கு வருதா.

 அப்படிப் பொறந்தவன் தான் இவன். இவன் கிட்ட நான் என்ன சொல்ல.. நிறைய பேருக்கு ரெண்டு அப்பா இருப்பாங்க. வளத்த அப்பா பெத்த அப்பா.. இவனுக்கு மட்டும் உண்மையாவே ரெண்டு அப்பா. ஒரு அப்பா உடம்புக்குள்ள இன்னொரு அப்பா உயிர் புகுந்து இவன உருவாக்கி இருக்கு. கேட்கவே நல்லா இருக்குல்ல..

 உடம்பு கொடுத்தது ஒரு அப்பா. உயிர் கொடுத்தது இன்னொரு அப்பா. இப்போ எந்த அப்பாவ நான் என் பையனுக்கு இது தான் உன்னோட அப்பான்னு காட்ட.."தேவா ஹேரி இருவரும் தலைகுனிய

" நீங்க என்ன நெருப்புக்கோழி வம்சமா. விட்டா தலைய மண்ணுக்குள்ள புதைச்சிடுவீங்க போல.."

"பேபி நான்".. குண்டலகேசி பார்த்த பார்வையில் ஹேரி வாய் தானாக பூட்டுப் போட்டுக் கொண்டது.

"இப்ப நான் எதுக்கு வந்தேன் தெரியுமா.. இவன் என்னோட பையன். இவ மேல உரிமை கொண்டாடி யாரும் வரக்கூடாது. இன்னொரு விஷயம் எனக்காக நீங்க ரெண்டு பேரும் உங்க வாழ்க்கைய வீணா ஆகாதீங்க. ஏனா எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணாம்.." இரண்டு ஆண்கள் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

 அப்பொழுதும் மனம் சிறிதும் இரங்காமல்" ஒரு விஷயம் முடிஞ்சு போனா அது அப்படியே விட்றனும்.. முடிஞ்சு போன விஷயத்த விடாம பிடிச்சு தொங்கி உங்க இஷ்டத்துக்கு கொண்டு போகணும்னா முடிவு இப்படித்தான் இருக்கும்.. தேவா நீ என்ன போன ஜென்மத்தில ரொம்ப உயிரா லவ் பண்ண.ஆனா அது முடிஞ்சு போச்சு. போன ஜென்மம்.நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கூட கிடைக்கல.

 ஆனா நீ உன்னோட மாந்திரீக வித்தையால மறுபிறவி வரம் கேட்டு  இந்தப் பிறவியிலயும் என் உசுர வாங்குற.. ஹேரி நீ பாக்காத..அவன் அப்படின்னா நீ இப்படி..  நீங்க அவன விட ஒரு படி மேல போய் கூடுவிட்டு கூடு பாஞ்சு கடைசியில என் மேல பாஞ்சி ஒரு பிள்ளைய கொடுத்துட்ட..

 நான் இந்த ரெண்டு வருஷமா யோசிச்சேன். இப்போ தான் என்னால ஒரு தெளிவான முடிவு எடுக்க முடிஞ்சது. என்னோட வாழ்க்கையில எனக்கு என் பையன் போதும். இதுக்கு மேல ஒரு வாழ்க்கை எனக்கு தேவ இல்ல.. எனக்கும் ஒரு காலத்துல ஆசை இருந்துச்சு. கல்யாணம் பண்ணனும். ரெண்டு புள்ளை பெத்துக்கணும்.. புருஷன் புள்ளைங்க அப்பா இப்படி சந்தோசமா வாழனும். சின்ன வீடு.. அளவான வருமானம். நிறைய சந்தோஷம். இப்படி நிறைய கனவு.

 நீங்க ரெண்டு பேரும் என் வாழ்க்கையில வந்தீங்க.. எல்லாமே நாசமாப் போச்சு. நான் கேட்கிற இதுக்கு மேல நான் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணா கூடு விட்டு கூடு பாஞ்சு உடம்புக்குள்ள நீ வரமாட்டேன்னு  என்ன நிச்சயம்?" அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்  ஹேரி தலை குனிந்தான்.

"அப்றம் நீ தேவா..திரும்பியும் மாந்திரீகம் கத்துகிறேன்  மண்ணாங்கட்டி கத்துகிறேன் அப்படின்னு சொல்லி  அடுத்த ஜென்மத்திலயும் என்ன நிம்மதியா விடாம மறுபிறவி கேட்க மாட்டனு என்ன நிச்சயம்?"

"குட்டி நடந்தது நடந்து போச்சு. நாங்க செஞ்ச தப்புக்காக உன் வாழ்க்கை இப்படி ஆகணுமா.. நான் உனக்கு வாக்கு தரேன் நீ நல்லா இருந்தா எனக்கு போதும்.உனக்கு ஹேரி வேணும்னா அவன் கூட தான் நீ சந்தோஷமா இருப்பனா நான் விலகி போயிடுவேன்.. எனக்கும் உன் சந்தோஷம் தான் முக்கியம்.. நான் செஞ்ச தப்புக்கு என்ன மன்னிச்சிடு"தேவா கையெடுத்து கும்பிட்டு அவளிடம் மன்றாடினான்.

"பேபி நீ என்ன மன்னிச்சிரு.. நடந்த எல்லா பிரச்சனைக்கும் நான்தான் காரணம்.. இப்பவும் எப்பவும் உன் வாழ்க்கையில நடக்கிற எல்லா பிரச்சனைக்கும் நான் மட்டும் தான் காரணம். நான் இல்லனா நீ இந்நேரம் தேவாவ கல்யாணம் பண்ணிட்டு   சந்தோஷமா இருந்திருப்ப. எல்லாமே என்னால தான். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. நீ தேவா கூட சந்தோஷமா இரு. நீ ஆசைப்பட்டது விரும்பினது எல்லாமே தேவா தான்.

 நான் இந்த ஊர விட்டே போயிர்றேன். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க."ஹேரி கண்களில் கண்ணீர் வழிய அவளிடம் மன்றாடினான்.

"எப்பா சாமி எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணா.. இவன உங்க கிட்ட காட்ட தான் வந்தேன். இனிமே என் வாழ்க்கையில  என் பையன் போதும். ஒரு பொண்ணு அவ வாழ்க்கையில ஆண் துணையோடு தான் வாழ முடியுமா? தனியா சுதந்திரமா அவ என்ன நினைக்கிறாளோ அதை செஞ்சுகிட்டு யாரோட அனுமதியும் இல்லாம வாழ முடியாதா?


 கல்யாணம் பண்ணி, குடும்பம் சொந்தபந்தம் இப்படித்தான் அவ வாழ்க்கை இருக்கணுமா.. எந்த ஒரு வேலை செஞ்சாலும்  புருஷன் கிட்ட சொல்லிட்டு சொந்த பந்தம் என்ன சொல்லனு பயந்து இந்த சமுதாயத்துக்கு பயந்து ஒரு பொண்ணு அவளோட கனவயே தொலைக்கிறா..


 காதல் அப்படின்னு ஒரு பேர வெச்சிட்டு இன்னும் எத்தன வருஷத்துக்கு பொம்பளைங்கள அடிமைப் படுத்துவீங்க. ஒரு பொண்ண உயிறா நேசிக்கிற ஆம்பளையும் இந்த ஒலகத்துல தான் இருக்கான். பொம்பள பாப்பாவ கூட விட்டு வைக்காம கெடுத்து நாசமாக்குற பரதேசியும் இந்த ஒலகத்துல தான் இருக்கான்..எனக்கு அப்படி ஒரு லவ் கெடைக்கல.

சுயநலமான உங்க காதல் எனக்கு வேணா.. ஒரு நிமிஷம்" தன் அலைபேசியை எடுத்து டிரைவருக்கு அழைத்து வரச் சொன்னாள்.

"ஆங் அப்றம் ஒரே ஒரு விஷயம் ஹேரி..நீ எப்படி தமிழ் பேசுற"..

இவள் என்ன பைத்தியமா என்று தோன்றியது அவனுக்கு.அவனது இதயமே சுக்குநூறாய் உடைந்து விட்டது.நிற்கக்கூட முடியாமல் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான்.  அப்படி இருந்தவனிடம் நீ எப்படி தமிழ் பேசுகிறாய் என்று கேட்டால் அவன் என்ன சொல்வான்?

முதலில் அவனால் வாய் திறந்து சொல்ல முடியுமா.. ஆனால் சொன்னான்.."என் ஃபிரன்ட்டுக்கு தமிழ் தெரியும் அதான்"

"ம்ம்ம்.. ரொம்ப வருஷமா இந்த டவுட் இருந்துச்சு அதான்.."

"குட்டி.. நீ எங்களுக்கு தண்டனை கொடுக்கிறதா நெனச்சி உனக்கு தண்டனை கொடுத்துக்கர"

"இல்ல தேவா.. நான் தெளிவா இருக்கேன். இன்னொரு தடவ ஏமாற்றத்த என்னால தாங்க முடியாது.. நான் ஒரு பொண்ணு. சாதாரண பொண்ணு.. உங்க கண்ணுக்கு இரும்பா தெரியுறேனா.. போதும் ரெண்டு பிறவிக்கும் நான் பட்டது போதும்.. எனக்கு பெரிய பாடத்த சொல்லி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி..

என் பையன நல்லபடியா நான் வளப்பேன்.. இனிமே உங்களுக்கும் எனக்கும் ஒன்னும் இல்ல.. என்னால உங்க வாழ்க்கைய அழிச்சிகாதீங்க. கல்யாணம்னா பத்திரிகை அனுப்புங்க.. முடிஞ்சா வரேன்..".

"பேபி நீ இல்லாம என்னால வாழ முடியாது"

"குட்டி என் உயிரே நீதான்"

"ஸ்ஸ்ப்பா இவனுங்க இம்சை தாங்க முடியல.. தோ பாருங்க ரெண்டு பேர் கிட்டயும் கேக்குறேன். உங்களுக்கு நான் உயிரோட சந்தோசமா இருக்கணுமா.. இல்ல உயிருள்ள பொணம் மாதிரி உங்கள்ள ஒருத்தன கல்யாணம் பண்ணிட்டு இருக்கணுமா.. நீங்களே ஒரு பதில் சொல்லுங்க.. அத நான் கேக்குறேன்".. குண்டலகேசி தீர்க்கமாகச் சொல்லிவிட்டு பதிலுக்காக அவர்கள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இரண்டு ஆண்களும் என்ன சொல்வார்கள்.சுயநலமான அவர்கள் காதல் வேண்டுமானால் தப்பாக இருக்கலாம்.ஆனால் அவள் மேல் கொண்ட காதல் உண்மை தானே. பிணம் மாதிரி தங்களோடு வாழ்வதற்கு பதில் சந்தோஷமாக அவளது குழந்தையோடு அவள் வாழட்டுமே.. இதுவரை அவள் வாழ்வில் தாங்கள் செய்த அனைத்திற்கும் விதி சேர்த்து வைத்து இப்பொழுது செய்து விட்டது.

 குண்டலகேசி ஒரு சுதந்திர மனிதி. அவள் வாழ்க்கையை அவள் வாழட்டும். இனி விதி எங்கே அழைத்துச் செல்கிறதோ அதன்படி தங்களது வாழ்க்கை செல்லட்டும் என்று இரு ஆடவர்களும் முடிவு செய்தார்கள். அதற்குள் கார் வந்து குண்டலகேசி அருகே நின்றது.

வந்தியதேவன் வந்து கார் கதவை திறந்து விட்டான். ஹேரியின் கண்கள் குண்டலகேசி இடுப்பில் அமர்ந்து அவளது கழுத்தை கட்டிக் கொண்டு இருந்த உதயிடம் இருந்தது. அவளருகே வந்து" பேபி ஒரே ஒரு தடவ  அவன நான் கிஸ் பண்ணிக்கிறேன்.. "ஏக்கம் நிறைந்த அவனது குரல் குண்டலகேசி மனதை இளக்கியது.

உதயை அவனிடம் கொடுத்தாள். ஹேரி முதன் முறையாக தன் மகனை கையில் ஏந்தி ஆசை தீர அவனுக்கு முத்தமிட்டு"உன் அம்மா சொல்றத கேட்டு நட.. எந்த பொண்ணயும் என்ன மாதிரி கஷ்டப்படுத்தாதே.." கண்ணீர் மல்க உதயை அவளிடம் கொடுக்க இருவரையும் பார்த்து பொதுவாக சிரித்தபடி காரில் ஏறி கிளம்பி விட்டாள். இறுதியாக ஒருமுறை அந்தப் பெரிய மாளிகையை திரும்பிப் பார்த்தாள்.

 அவள் மனம் துடியாய் துடித்தது. இன்னொரு முறை ஏமாற அவள் தயாராக இல்லை. இரண்டு ஆண்களும் அவளை உயிராக நேசிக்கிறார்கள். நடந்தது எல்லாமே ஒரு விபத்துதான்.  இருவரில் ஒருவரை அவள் தேர்ந்தெடுத்தால் இன்னொருவரால் அதை தாங்கிக்கொள்ள முடியுமா?  மீண்டும் இதே மாதிரி பிரச்சனை வந்தால் அவள் என்ன செய்வாள்? தான் யாரோடு குடும்பம் நடத்துகிறேன் என்று தெரியாமல் இருப்பது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பெரிய கொடுமை?  மீண்டும் அந்த கொடுமையை அவள் அனுபவிக்க வேண்டுமா?

அதற்கு இந்தத் தனிமை அவளுக்கு ஆயிரம் மடங்கு மேல். எந்த இடத்தில் அவளது வாழ்க்கை ஆரம்பித்தது அதே இடத்தில் முடிந்து போனது. அந்த தென்னை மர தோட்டத்தை விட்டு வெளியே வரும்போது அவள் ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பித்து இருந்தாள்.  ஆவுடையப்பன் அவளிடம் ஒன்றுமே கேட்கவில்லை. மகள் முகத்தில் இருந்த தெளிவு அவருக்கு சொல்லாமல் சொல்லியது  அங்கே என்ன நடந்திருக்கும் என்று.

 ஒரு தகப்பனாக அவருக்கு வலித்தாலும் ஒரு ஆணாக தன் பெண்ணின் முடிவை எண்ணி கர்வம் கொண்டார்.அடுத்த ஒரு வாரத்தில் குண்டலகேசியின்  குடும்பமே விமான நிலையத்தில் நின்றது. குண்டலகேசி உதயோடும் ஆவுடையப்பனோடும் மீண்டும் துபாய் செல்கிறாள் ஒரேயடியாக. அவள் வாழ்க்கை இனி அங்கே தான்.

 இந்த இரண்டு வருடத்தில் சங்கரன் உதவியோடு ஹேரியிடம் வாங்கிய பணத்தை வைத்து ஹோம் மேட் மேக் அப் பிசினஸ் ஆரம்பித்து இப்பொழுது இலாபகரமாக அதனை நடத்திக் கொண்டிருக்கிறாள். அவளது இரசாயனங்கள் இல்லாத ஒப்பனைப் பொருட்களுக்கு மார்க்கெட்டில் நல்ல தரம் இருந்தது.. இனி தந்தையை தனியாக விட மனமில்லாமல் அவரையும் அழைத்துக் கொண்டு துபாய் கிளம்பி விட்டாள். அவள் மனதில் ஒரு திட்டம் இருந்தது. சொந்தமாக ஒரு அனாதை விடுதி நடத்த வேண்டும் என்று. அனாதை விடுதியாக இல்லாமல் ஆதரவற்ற குழந்தைகளை வளர்ப்பதற்கு  ஒரு பெரிய வீடு கட்ட வேண்டும் என்று.

 அவள் இன்னும் ஓட வேண்டும்.அந்த குழந்தைகள் படிப்பிற்காகவும்  வாழ்க்கைக்காகவும் அவள் இன்னும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும். தொழிலில் ஏற்படும் போட்டி பகையை அவள் தனியாளாக நின்று தகர்த்தெறிய வேண்டும். இதற்கெல்லாம் அவளுக்கு மன தைரியம் வேண்டும். அது அவளிடம் நிறையவே இருக்கிறது. அவள் கண்டிப்பாக அவளது கனவை தொட்டு விடுவாள்.

குண்டலகேசி கனவை நோக்கிய பயணம் படுகிறாள். அவளுக்கு துணையாக தகப்பனும் அவள் வாழ்வின் உந்துகோலாக மகனும் அவளோடு பயணப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவளது கனவு நிறைவேற நாமும் ஒரு வாழ்த்துக் கூறி விட்டு விடை பெறுவோம்.விமான பறவை மேக கூட்டங்களின் நடுவே செல்ல தந்தை தோளில் சாய்ந்து மகனை மாரோடு கட்டிக் கொண்டாள் குண்டலகேசி.

இருமுறை நெருங்கினா(ள்)
உடைத்தெறியப்
பட்டாள்!
இம்முறை நெருங்கினா(ல்)
உடைத்தெறிவாள்!

சுபம்..

ஹாய் டியரிஸ்.. இந்த கதைக்கு விமர்சனம் அளித்து ஆதரவு கொடுத்த உங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி.. இந்த முடிவு எனக்கு சரின்னு பட்டது. சிலருக்கு ஏமாற்றமாக இருந்துருக்கலாம். ஆனா எனக்கு இது சரியா படுதுஉங்களுக்கும் புடிக்கும்னு நம்புறேன்❤️ அடுத்த வாரம்

🧡காண்பவை யாவுமே தேன்🧡

உங்களுக்காக காத்திருக்கு. அடுத்த ஆன்டி ஹீரோ கதைக்கு தயாரா?

Comments

  1. Ithan seri... ❤❤avalala thaniya vazha mudiyum

    ReplyDelete
  2. Semma super nice ending 😊

    ReplyDelete
  3. Unmailaye ipdi oru thairiyam elarukumae venum.Ponunu oru vatathukula namala namae surukikama irukanum.As usual nenga kalakitrnga writer madem.Nala story line sariyana mudivu.Thanks for this wonderful story.

    ReplyDelete
  4. Sema... Oru ponnala Kandipa thaniya vaala mudiyum.. Kesi Avaloda dream Kandipa achieve pannanum..

    ReplyDelete
  5. Unmailla ya nalla mudivu sis....

    ReplyDelete
  6. Wow semaaaa semaaaa super ending itha ethir pakala romba pudichi iruku 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

    ReplyDelete
  7. அருமையான முடிவு super 👌👌👌👌👌👌 கேசி,நல்லா இருந்தது நிலா,😭😭😭😭😭👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  8. Really unexpected sis, super desicion

    ReplyDelete
  9. Vera level sis👏👏👏👏... Awesome story🥰🥰🥰

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்