சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 15


“என்ன மச்சான் ராத்திரி பூரா தூங்கல போல கண்ணெல்லாம் செவந்து போயி கெடக்கு.. தூங்காம செவந்து கெடக்கா இல்ல உன்ற பொண்டாட்டி பொம்பள ஹல்க் அடிச்சு அழுததால செவந்து கெடக்கா”தோப்பில் அமர்ந்திருந்த நீரனின் அயர்ந்த தோற்றத்தை கண்டு வினவினான் ராசு.

“விடிய விடிய தூங்கல.. அதான் கண்ணு ரெண்டு செவந்து போச்சு..”

விடிய விடிய தூங்காமல் என்ன பண்ணிருப்பான் என நீரனை பார்க்க “மச்சான் நீ அடப்பாவி என்னடா வெக்கப் படுற.. இதெல்லாம் உன் வாழ்க்கயில நடக்கவே நடக்காதுனு நெனச்சேனே.. நடத்தி காட்டிட்டியே மச்சான் செம்ம டா.. ஆமா இதுக்கு பொம்பள ஹல்க் எப்டி சம்மதிச்சது”..

“உன்னால தான்.. நீதான புள்ளக் குட்டி வேணுமா பாம்பு குட்டி வேணுமா அவள நல்லா கொழப்பி விட்ருக்க.. அவ அத நம்பி என் பரம்பரைக்கே பெரிய சாபம் இருக்குனு நெனச்சு ஊரு முழுக்க இத பத்தி விசாரிச்சு ஒரே கூத்து மச்சான்”நடந்தவைகளை கேட்ட ராசு

“மச்சான் அந்த பொண்ணு உன்னிய உண்மையா லவ் பண்ணுதுடா.. நீ பண்ணதுக்கு பேரு என்ன தெரியுமா..பச்ச துரோகம்.. அந்த பொண்ணோட மனசு நெனச்ச பாத்தியா? உன்ன பத்தி தெரிஞ்சா அந்த பொண்ணு தாங்குமாடா? ஏன் நீரா இப்படி பண்ண? நா உன்ற மேல எவ்வளோ நம்பிக்க வெச்சிருந்தேன்.. இப்படி சல்லியா சல்லியா ஒடச்சி நொறுக்கிட்டியே”ராசு கண்களில் மெய்யான வருத்தம்.. தன் நண்பனா இப்படி செய்தான்.. தன்னை நம்பி வந்த பெண்ணின் மனதை அடியோடு உடைத்து விட்டானே..  தன்னுடைய இயல்புக்கு மீறி இவன் மீது அளவு கடந்த நேசம் வைத்தது செந்தூரா செய்த தவறா..  அந்த நேசத்தினால் இவனைப் பற்றிய உண்மை அறியாமல் அவளையே இவனுக்கு கொடுத்தது அவளது முட்டாள்தனமா?ராசுவிற்கு அனைத்தையும் செய்து விட்டு தலைகுனிந்து அமர்ந்திருக்கும் நண்பனைக் காண ஆத்திரம் பொங்கியது.

அவன் அறியாதவன் இல்லையே. செந்தூரா வைத்திருக்கும் காதலை விட கோடி மடங்கு நேசத்தை அவள் மேல் வைத்திருக்கிறான் பாவிமகன். அந்த நேசம் தான் கொண்டவளுக்கு உண்மை தெரியும் முன் அவளை முழுதாக உணர கூறியது. ஏற்கனவே செந்தூராவிற்கு உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ என்று பயத்தில் சில நாட்களாக சரியாக தூக்கமே இல்லை ராசுவிற்கு. இதில் நீரன் செய்த காரியத்தால் செந்தூரா என்ன நடவடிக்கை எடுத்தபாள் என்பதை நினைத்தாலே அவனுக்கு அடி வயிரெல்லாம் கலங்கியது..

“டேய் நா இங்க நாயி மாறி கத்திகிட்டு இருக்கேன்.. நீ என்னடா செய்றதெல்லாம் செஞ்சிட்டு தல குனிச்சு ஒக்காந்துட்டு இருக்க..”ராசுவை நிமிர்ந்து பார்த்த நீரனின் கண்களும் கலங்கி இருந்தது

“என்ன என்னா மச்சான் பண்ண சொல்ற.. லவ் பண்ற பொண்ணு என் நெஞ்சுல விழுந்து அழும்போது வேடிக்க பாக்க சொல்றியா..எனக்கு மட்டும் உண்மைய மறைச்சு அவ கூட குடும்பம் நடத்த ஆசையா என்ன.. அவகிட்ட உண்மய சொல்ல ட்ரை பண்ணேன் மச்சான் ஆனா முடியல.. எனக்கு தகிரியம் இல்ல.. “

“மச்சான் இப்ப சொல்லி இன்னும் பிரச்சன பெருசாவ போது.”

“தெரியும்டா இனிமே இத விட்டா எங்க போயி முடியும்னு தெரில. அவ என்ன சொன்னாலும் சரிதான். இன்னைக்கு அவக்கிட்ட எல்லாத்தையும் சொல்ல போறேன்”

“நீரா அவ உன்ன கேவலமா நெனைப்பா.. ஆனாலும் பரவால்ல சொல்லிரு”

“மச்சான் நா கெளம்புறேன்டா அப்றம் பாப்போம்”நீரன் ராசுவிடம் விடைபெற்று வீட்டிற்கு வந்தான். சின்னுவிற்கு கணக்கில் ஏதோ புரியவில்லை போல அவனிடம் கண்களை உருட்டி மிரட்டி கணக்கு சொல்லி கொடுத்து கொண்டிருந்தாள் செந்தூரா. ஐயோ இவ கிட்ட போயா கணக்கு கேட்டோம் என்று மிரள விழித்து கொண்டிருந்தான் சின்னு. நீரனின் பைக் சத்தம் கேட்டதும்

“ஐ நீரண்ணா வந்துருச்சு.. அக்கா நா அப்றம் கணக்கு கேட்டுக்குறேன்..”

“டேய் டேய் உங்க நீரண்ணா வந்தா என்னடா.. ஒழுங்கா வந்து கணக்க முழுசா போட்டுட்டு போ”

“அக்கா நீ மொதல்ல நீரண்ணனுக்கு சோத்த போடு போ”செந்தூரா கூப்பிட கூப்பிட ஓடியே விட்டான் சின்னு..

“எப்படியும் நோட்ட எடுக்க வருவல்ல அப்ப பேசிக்குறன்டா உன்ன..”என்றவள் நீரனை பார்த்து”நீ ஜமீனு பரம்பரைன்னா செவப்பு கம்பளம் விரிச்சு பூ போட்டு வூட்டு குள்ளாற வர சொல்லனுமா..உள்ள வராம வண்டிக்கு காவலா வெளிய ஏன் நிக்குற”

“ஏன்டி மானத்த வாங்குற.. வண்டில தூசி நெறைய இருக்கு டி அதான் துடைக்கலாமா ஒரேடியா கழுவுலமான்னு பாத்துட்டு இருந்தேன்..அதுக்குள்ள தெருவுக்கே கேக்குற மாறி சவுண்ட்டு விடுற”

“நா என்னத்த கண்டேன்..வண்டிக்கு காவகாரன் மாறி அதயே மொறச்சு பாத்து நின்னா என்னானு நினைப்பாங்க”செந்தூரா நொடித்தபடி உள்ளே செல்ல அவளுக்கு பின்னால் நெஞ்சு படீர் படீரென அடித்து கொள்ள வீட்டினுள் சென்றான் நீரன்.அவன் உள்ளே நுழைந்ததும் பின்னாலிருந்து அவன் இடையை கட்டி கொண்டவள்

“வீட்டுக்கு வந்தோமா ஒடனே பொண்டாட்டி எங்கன்னு தேடி அவள இப்டி கட்டிகிட்டோமான்னு இல்லாம வண்டிக்கு காவலா காக்குற.. உன்னலாம் கட்டி வெச்சு தோல உரிக்கணும்..”அவள் இப்படி கட்டிக்கொண்டு நின்றால் எங்கிருந்து உண்மையை சொல்ல.. ஏக்கமும் தாபமும் அவனை போட்டி போட்டு வெல்ல முயல அதனை காதலும் கடமையும் அடக்கி விட்டு முன்னே வந்தது.

“செர்ரி இங்க வாயேன்..”அவள் கை பிடித்து முன்னே இழுத்தான்.அப்படியிருந்தும் அவள் பிடி அவன் இடையை சுற்றியே இருந்தது. அவளை மெல்ல நடத்தி சோபாவில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்து கொண்டான்.

“செர்ரி நா உன்ற கிட்ட ஒரு விஷயம் பேசணும்.. அது உனக்கு எம்புட்டு ஷாக்கா இருக்கும்னு எனக்கு தெரியும் ஆனா வேற வழி இல்ல.இந்த விஷயத்த சொல்ற முன்னடியே உன்ற கூட ஒன்னு மண்ணா இருந்தது தப்பு தான்..”அவன் மென்று விழுங்க அவனின் தலை முடிக்குள் விரல்களை விட்டு அலைந்தவள்

“நீரா எனக்கு எல்லாம் தெரியும்.. ராசு உன்ற குடும்பத்து மேல இருக்குற சாபத்த என்கிட்ட சொல்லிட்டான்..நா படிச்ச பொண்ணா இருந்தாலும் இந்த மாறி விஷயத்த நம்பாம இருக்க முடியல.. நீ கவலபடாத நீரா.. ராசு சொன்னான் புள்ள மொத பொறக்கணும்னா நீ உன்ற உயிர தியாகம் பண்ணனும்னு. அதெல்லாம் வேணா ஒருவேள நமக்கு உன்ற வம்சத்து சாபம் படி பாம்பு பொறந்தாலும் சரி அத சாமியா கூம்பிடலாம். அதுக்கு அப்றம் மெல்லமா புள்ள பொறந்தாலும் ஓகேதான். என்ன இது உலக அதிசயம்னு ஒலகமே நம்மள திரும்பி பாக்கும்.. பாத்தா பாக்கட்டும் எவன் பாத்தா நமக்கு என்ன”

“ஹேய் ஏன்டி நீ இப்டி இருக்க.. உன்னிய பாத்தா இந்த ஊரு சனம் அத்தன பேரும் பயந்து சாவும்..என்ற ஜோட்டு பசங்க எல்லோரும் உன்னிய சைட்டு அடிப்பானுங்களே தவிர உன்ற மேல ஆசப்பட்டது இல்ல.. என்னா அம்புட்டு பயம் உன்ற மேல. நீ அப்டியே கெத்தா பொம்பள ரவுடியாவே இருக்க வேண்டி தானடி.. எதுக்குடி புதுசா இந்த காதல் மன்னி கெட்டப்பு. ஐயோ நா என்னன்னு சொல்லுவேன் செந்தூரா என்ற மேல பைத்தியா இருக்குற உன்ற கிட்ட எப்டி உண்மைய சொல்லுவேன்..”

“என்ன நீரா என்னென்னவோ சொல்ற.. பசிக்குதா அதான் பசியில உளறிட்டு கெடக்கியா”

“ப்ளீஸ் செந்தூரா என்ன பேச விடு..”நீரன் எழுந்து நின்று நீண்ட பெருமுச்சுக்களை விட்டு தன்னை சமன் படுத்தி கொண்டான்.”செந்தூரா நா சொல்ல போறத தெளிவா கேளு..என் வம்சதுக்கே ஒரு சாபம் இருக்கு”

“அதான் தெரியுமே அந்த பாம்பு சாபம் தானே”

“ஹேய் அப்டியே வெச்சன்னா தெரியும்..கைய வாயில வையி.. வைடி.. இப்டி வச்சு வாய மூடிக்கிட்டு நா சொல்லி முடிக்குற வர கம்முன்னு இருக்குற..”அவளது இரு கரத்தையும் எடுத்து வாயை மூடி அமர கூறியவன் தன் பேச்சை தொடர்ந்தான்.

“அந்த சாபம் எப்டி வந்துச்சின்னா என்ற வம்சம் ராச வம்சம்.என்ற வம்சத்துல எத்தனையோ பேருக்கு முன்னாடி யாரோ ஒருத்தன் பொறந்துருக்கான். அவன் அந்த ஊருக்கு ராசாவா இருந்துருக்கான்.. ஆனா அவன் சிவ பக்தன். கல்யாணமே வேணான்னு சொல்லிட்டு திருஞ்சவன அவங்க அப்பா அம்மா பேசி சரிகட்டி ஊருலயே அழகான பொண்ண கட்டி வெச்சிருக்காங்க. அந்த பொண்ணுக்கு பாத்ததும் இவன புடிச்சு போச்சு.. இந்த முட்டா பயலுக்கு அந்த பொண்ண பாக்கையில பார்வதி தேவி மாறி தெரிய கையெடுத்து கும்பிடு போட்டு நா கும்புடுற சாமி மாறி இருக்க.. உன்கூட நா எப்டி குடும்பம் நடத்தனனு பக்கி கேக்க அந்த பொண்ணுக்கு தான் இவனோட பக்தி தெரியுமே.அதனால அது சரிங்க நீங்க என்ன கும்புடுற சாமியா பாருங்க. நா உங்கள என் புருஷனா பாக்குறேன். எப்ப உங்க மனசு மாறுதோ அப்ப வாழ்க்கைய வாழலாம்னு சொல்லி அவன் கூட வாழ ஆரம்பிச்சது.அவன் பய பக்தியோட பொண்ண பாத்தான். பொண்ணு பயங்கர லவ்வோட அவன பாத்துச்சு. அந்த மாங்கா மடையனுக்கு மனச புரிய வைக்க படாதபாடு பட்டுச்சு. வருஷம் ஓடுச்சு. ஐஞ்சு வருஷம் ஆச்சு.இவங்க சொந்த விஷயம் வெளிய தெரியாது. அதனால ராணிக்கு குறைன்னு ஊரே பேசுச்சு. அப்பவும் அந்த பொண்ணு தன்னோட லவ்வ அவன் கிட்ட சொல்லாம சொல்லிக்கிட்டு இருந்துச்சே தவிர அவன வற்புறுத்தல.ராசாவோட மாமனும் இதான் சாக்குனு அவன் பொண்ண ரெண்டாவதா கட்டி கொடுக்க ஐடியா பண்ணி மகள பேசி சரிகட்டி ராணியாவ ஆச காட்டி ஒரு ரூமுகுள்ள போயி இருக்க சொல்லிட்டு ராசாவுக்கு மூடு வரவும் சுயநினைவே இல்லாம இருக்கவும் எதையோ கலந்து கொடுக்க அவனுக்கு மூடு வந்துருச்சு..கண்ணு மண்ணு தெரியாத மூடு. உடனே பொண்டாட்டிய தேடி போனவன அப்டியே மடக்கி தன்னோட மக இருந்த ரூமுக்குள்ள தள்ளிட்டான் மாமன்காரன்.செம மூடு சுயநினைவே இல்ல ராசாவுக்கு அங்க இருக்குற பொண்ணு யாருனு கூட கண்டுபுடிக்க முடியல. பாவம் ராணி இது எதுவும் தெரியாம அவ ஆச ஆசயா செஞ்ச செலய கையில வெச்சிக்கிட்டு இருந்துருக்கா. அவ நல்லா செல செய்வாளாம்.அந்த செலயில ஆம்பளையும் பொம்பளையும் பின்னி பிணைஞ்சு இருக்குற போல இருந்துருக்கு.இத கொடுத்து நாசுக்கா ஆசைய சொல்லி இன்னைக்காவது தன்னோட மனச அவன் புரிஞ்சிபானு நெனச்சி கனவு கண்டுக்கிட்டு இருந்தா. ராசா வர டைம் தாண்டி வராம இருக்க வேலக்காரி கிட்ட கேக்க அவ மென்னு முழுங்கி விஷயத்த சொல்ல அடிச்சு புடிச்சு இவ கையில இருந்த செலயோட ஓடிருக்கா. அங்க பாத்தா எல்லாம் முடிச்சே போச்சி. புருஷன கண்டவ கூட பாத்த ராணி செம கடுப்பாயி நா இத்தன வருஷம் ஆசைய அடக்கிட்டு உன்ன மனசால லவ் பண்ணிட்டு காத்துட்டு இருக்கேன்.ஆனா நீ எனக்கு துரோகம் பண்ணிட்டல..அப்டினு கத்த அந்த மாமன் மக உனக்கு புள்ள பெத்துக்க வக்குள்ள அதான் ராசா என்கூட இருக்காருன்னு நக்கலா சிரிச்சிருக்கா. உடனே ராணி என் காதல் எவ்ளோ உண்மையோ என் ஆச எவ்ளோ உண்மையோ அந்த அளவுக்கு இப்போ நா வயிரெரிஞ்சு விடுற சாபமும் உண்மயா இருக்கும்.புள்ள பெத்துக்க வக்குள்ளன்னு சொன்ன தானே தாரலமா ராசாவோட புள்ளைய நீ பெத்துக்கோ.. ஆனா புள்ள பொறந்த கையோட நீ செத்து போயிருவ..

நீ மட்டும் இல்ல உன் வம்சத்துல பொறக்குற எல்லாமே ஆம்பளையா பொறக்கும். அவனுங்கள கட்டிக்குற பொண்ணுங்க எல்லாம் ஒரு புள்ளைய பெத்துட்டு செத்து போயிருவாங்க. நானாவது அறவே புருஷ சுகத்த அனுபவிக்கல.. ஆனா நீயும் உன் வம்சத்து மருமக எவளுக்குமே நா அனுபவிக்காத சுகத்த அனுபவிச்சு பாதியில அது அறவே கிடைக்காம நாசமா போனும். அதோட சேத்து உசுரும் போனும்னு சாபம் விட்டுட்டு ஓடி போயி மாடியில இருந்து குதிச்சு செத்துருச்சி.அது செத்து ரொம்ப நேரம் கழிச்சு ராசாவுக்கு நெனப்பு தெளிஞ்சு மாமன போட்டு தள்ளிட்டு பதவியும் வேணா ஒரு கருமமும் வேணானும் எங்கயோ போயி தொலஞ்சிட்டான். அந்த கேப்மாரி மாமன் மக மாசமாயி ஒரு புள்ளைய பெத்த கையோட செத்து போக ராசாவோட அப்பன் ஆத்தா அந்த புள்ளைய வளத்துருக்காங்க.ஆனா ராணி சாபம் விட்ட மாறி அந்த வம்சத்துல அதுக்கு ஆம்பள புள்ளைங்க மட்டுமே பொறக்க அவனுங்க பொண்டாட்டி எல்லாம் ஒத்த புள்ள பொறந்தோன செத்து போயிருச்சிங்க. சரி எதுக்கு பொண்டாட்டி ஊர சுத்தி வப்பாடின்னு எவளையாச்சும் வெச்சுக்கலாம்னு பாத்தா பொண்டாட்டி செத்த கையோட இவனுங்களுக்கு ஆண்மை செத்துருச்சு.

மொத பெருசா கண்டுக்காத எங்க மாங்கா மடையன் பரம்பரை என்னடா இப்டி இருக்கேனு அப்றம் ஒரு சாமியாடிய பாக்க அவன் எங்க அரண்மனைக்கு வந்து சந்து பொந்துன்னு தேடி பழைய ஓல சுவடிய எடுத்து படிச்சு விஷயத்த சொல்லி அந்த சாபம் போக்க வழியும் சொன்னான். அந்த ராசா கடுப்பாக்கி எங்கயோ போயி தவம் பண்ணி அப்டியே ஜீவ சமாதி ஆயிட்டானாம். அந்த ராணி சாவும் போது கையில வெச்சிருந்துச்சே ஒரு செல அதுல தான் ராணியோட சாபம் இறங்கிருக்கு. அந்த செல இந்த அரண்மனையில எங்கேயோ இருக்கு. அது கண்டுபுடிச்சு ராசா சமாதியான இடத்துல கொண்டு போயி சேக்கணும்.அதும் உண்மையா காதலிக்குற ஒரு தம்பதி தான் செய்யணும். இத கேட்டோன எவ்ளவோ ட்ரை பண்ணாங்க செலய தேட ஆனா முடியல. அப்றம் கால போக்குல அந்த சாபத்த மறைச்சு கல்யாணம் பண்ண பொண்டாட்டி செத்துரும். அப்றம் ஆம்பளையே கடைசி வர வாழா வெட்டனா இருந்து பையன வளத்து இன்னொரு இளிச்சவாயிக்கு கட்டி கொடுப்பான். இப்டியே என்ற பரம்பரை இருந்துருக்கு.. என்ற தாத்தன் பொண்டாட்டி செத்தாலும் பரவால்ல அவன் தம்பிய காப்பாத்தியே ஆகணும்னு எவ்ளோ ட்ரை பண்ணி செலய தேடி கெடைக்காம என்ற பாட்டிய கூட்டிட்டு ஊர விட்டே ஓடி இந்த ஊருக்கு வந்துட்டாறு. அப்பவும் சாபம் விடாம என்ற பாட்டி மண்டைய போட தாத்தாவுக்கு தம்பி செத்து போச்சு.

பொறவு சாவுறப்போ என்ற அப்பாரு கிட்ட இத சொல்ல அவரு மொத நம்பாம கல்யாணம் பண்ணி என்ற அம்மா அநியாயமா செத்து போக அவருக்கும் தம்பி சாவ அப்பதான் விஷயம் புரிஞ்சது எங்கப்பாருக்கு. அத அவரு சாவுறதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான் என்ற கிட்ட சொன்னாரு. அதான் அப்ப என்கிட்ட லவ்வ சொன்னதுக்கு உன்ன அப்டி பேசி தொரத்தி விட்டேன். அதுக்கு அப்றம் நானும் ராசுவும் சேந்து தேடோ தேடுன்னு தேடி செலய கண்டு புடிச்சோம்.அந்த செலய கண்டு புடிக்க ராசு அவன் உசுரயே பணயம் வெச்சிருக்கான்”செந்தூரா அதிர்ந்து நிமிர்ந்து பார்க்க அடுத்து பெரிய இடிகளை இறக்க தயாராக இருந்தான் நீரன்.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்